முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணை மதிப்பெண் வழங்கும் விவகாரம் : சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. அப்பீல்

திங்கட்கிழமை, 16 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்ணாக 196 மதிப்பெண்கள் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு, தவறான மொழி பெயர்ப்புக்காக கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே சி.பி.எஸ்.இ. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “வினாத்தாள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யும்போது தமிழ் வார்த்தைகள் சரியானதா என்பதை சி.பி.எஸ்.இ.யால் உறுதி செய்ய முடியாது. ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்வதற்கு இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது” எனக் கூறப்பட்டிருந்தது.

அப்போது நீதிபதிகள், “தமிழக மாணவர்கள் பால் பாக்கெட், பேப்பர் போட்டு படிக்கின்றனர். இதுபோன்ற தவறு காரணமாக அவர்களின் மருத்துவ கனவு பாழாகிறது. வருங்கால சமுதாயத்தை நல்ல முறையில் கொண்டுச்செல்வது நமது கடமை. தமிழில் மொழி பெயர்ப்பில் அதிக பிழைகள் உள்ளன. இந்த வினாத்தாள் எப்படி ஏற்கப்பட்டது. நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. யாருடைய கருத்தையும் கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறது” என அதிருப்தியை வெளிப்படுத்தினர். பின்னர், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு அண்மையில் வழங்கியது. அப்போது, நீதிபதிகள், “ஆங்கிலத்திலிருந்து தமிழில் கேள்விகள் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது பல்வேறு தவறுகள் நிகழ்ந்துள்ளன. இது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு தவறாக இருந்த 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். மதிப்பெண்கள் 2 வாரத்திற்குள் வழங்கப்பட்டு புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட வேண்டும்” என சிபிஎஸ்இக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது. இதனால் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மேலும் காலதாமதமாகக் கூடும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து