முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை விவகாரம்: கேரளாவில் அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வி காங். பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம்,சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கேரள அரசு நடத்திய அனைத்து கட்சி கூட்டம் தோல்வியில் முடிந்தது. பெண்களை அனுமதிக்கும் விஷயத்தில் முதல்வர் பினராய் விஜயன் உறுதியாக இருந்ததால் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தன.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டபோது சில இளம்பெண்கள் கோயிலுக்குச் செல்ல முயன்றனர். இந்து அமைப் பினரின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த 22-ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டது. ஒரு பெண் கூட ஐயப்பனை தரிசிக்கவில்லை. இந்தப் பின்னணியில் சபரிமலை தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கை ஜனவரி 22-ம் தேதி முதல் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவதாக தெரிவித்துள்ளது. அதே சமயம், முந்தைய தீர்ப்பு தற்போது அமலில் இருப்பதால் அதற்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.

இந்தநிலையில், மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.இதில் காங்கிரஸ், பா.ஜ.க, முஸ்லிம் லீக் உள்ளட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, காங்கிரஸ் மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், பா.ஜ.க. மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது சபரிமலை கோயில் பாரம்பரியத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எதிர்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மாநில அரசு நிறைவேற்றுவதாக கூட்டத்தில் முதல்வர் பினராய் விஜயன் கூறினார். ஆனால் இந்த விவகாரத்தில் கேரள அரசு பிடிவாதம் காட்ட வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். அப்போது பேசிய முதல்வர் பினராய் விஜயன், சுப்ரீம் கோர்ட்டின் தீ்ர்ப்பை அரசு முழுமையாக நிறைவேற்றும். இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. பெண்கள் அனுமதிக்க வேண்டும் என்பதை சுப்ரீம் கோர்ட் மீண்டும் கூறியுள்ளதால் இதை அமல்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரச்சினைக்கு தீர்வு காண அரசு விரும்பவில்லை எனக் கூறி காங்கிரஸ், பா.ஜ.க, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். பின்னர் இது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கூறுகையில்,பிரச்சினைக்கு தீர்வு காண அரசு விரும்பவில்லை. இரண்டு மணிநேரத்தை வீணடித்து விட்டோம். இந்த கூட்டம் முழு தோல்வியடைந்து விட்டது என்று தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், நல்ல வாய்ப்பை அரசு தவற விட்டு விட்டது. அரசின் பிடிவாதம் காரணமாகவே தீர்வு எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து