அக்ஷயா பாத்திரம் திட்டம்: உ.பி.யில் 300-வது கோடி குழந்தைக்கு பகல் உணவு பரிமாறி கொண்டாடிய பிரதமர் மோடி
லக்னோ, அக்ஷயா பாத்திரம் திட்டத்தின் மூலம் மாணவ, மாணவியருக்கு இதுவரை இலவசமாக 300-வது கோடி பகல் உணவு அளிக்கப்பட்ட சாதனையை பிரதமர் மோடி விருந்தாவனத்தில் உணவு பரிமாறி கொண்டாடினார்.
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அக்ஷயா பாத்திரம் என்ற தொண்டு நிறுவனம் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக பகல் உணவு வழங்கி, நாட்டில் கல்வியறிவின் வளர்ச்சிக்காக சேவை புரிந்து வருகிறது. பள்ளிகளில் பசியுடன் படிக்கும் குழந்தைகள் கல்வியின் மீது கவனம் செலுத்த முடியாமல் போய் விடும் என்பதற்காக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் கடந்த சில ஆண்டுகளில் பலகோடி மாணவ, மாணவியருக்கு பகல் உணவு அளிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், 300-வது கோடி பயனாளிக்கு நேற்று பகல் உணவு வழங்கும் நிகழ்ச்சி உத்தரபிரதேசம் மாநிலம், மதுரா நகரில் உள்ள விருந்தாவனத்தில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேசம் மாநில கவர்னர் ராம் நாயக், முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் ஆகியோர் அங்கு மாணவ, மாணவியர்களுக்கு உணவு பரிமாறினர். இந்நிகழ்ச்சியில் மதுரா பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நடிகை ஹேமா மாலினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.