முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் வேட்பாளர் பெயர் அறிவிக்கும் முன்னரே திருமங்கலத்தில் தி.மு.க கூட்டணியினர் வாக்குச் சேகரிப்பு:

வியாழக்கிழமை, 21 மார்ச் 2019      மதுரை
Image Unavailable

  திருமங்கலம்.- விருதுநகர் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் பெயர் அறிவித்திடும் முன்னரே மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தி.மு.க கூட்டணி கட்சியினர் மேற்கொண்ட வாக்குச் சேகரிப்பு பிரச்சாரத்தை முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா தொடங்கி வைத்தார்.
அ.தி.மு.க மற்றும் தி.மு.க கூட்டணி கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு தமிழகமெங்கிலும் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது.இந்நிலையில் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு விருதுநகர் பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்ட போதிலும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாததால் கூட்டணி கட்சியினரிடையே சற்று மந்தமான சூழ்நிலை காணப்பட்டது.இந்நிலையில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டாலும் சரி,அறிவிக்கப்படா விட்டாலும் சரி, பிரச்சாரத்தை உடனடியாக தொடங்கிடுவது என்று மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் முடிவெடுக்கப்பட்டது.இதனை தொடர்ந்து நேற்று மாலை திருமங்கலம் நகர் தெற்குத்தெரு,காந்திசிலை முன்பாக தி.மு.க,காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தடீரென்று திரண்டனர்.
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நடைபெற்ற இந்த வாக்குச் சேகரிப்பு பிரச்சாரத்திற்கு திருமங்கலம் நகர தி.மு.க செயலாளர் மு.சி.சோ.சி.முருகன் தலைமை வகித்தார்.மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஆர்.ஜெயராம் முன்னிலை வகித்தார்.தி.மு.க மற்றும் அதன் தோழமை கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இந்த வாக்குச் சேகரிப்பு பிரச்சாரத்தை முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா தொடங்கி வைத்து,காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயரில்லாத,காங்கிரஸ் கட்சியின் சின்னம் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை அப்பகுதி மக்களுக்கு வழங்கி வாக்குச் சேகரித்தார்.வாக்குச் சேகரிப்பின் போது வழங்கப்பட்ட துண்டு பிரசுரங்களில் காங்கிரஸ்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் இல்லாதது கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.இருப்பினும் விரைவில் வேட்பாளர் பெயர் வெளியாகிடும் என்று கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி நிலைமையை சமாளித்தனர்.தி.மு.க கூட்டணிகட்சியினரின் இந்த பிரச்சாரம் பொது மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து