முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகன்மோகனின் வெற்றிக்கு வழிவகுத்த பிரசாந்த் கிஷோரை சட்டசபை தேர்தலுக்காக பணியில் அமர்த்தினார் மம்தா பானர்ஜி

வியாழக்கிழமை, 6 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் மிகப்பெரிய வெற்றிக்கு உதவிய பிரசாந்த் கிஷோரை மேற்கு வங்க தேர்தல் பணிக்கு மம்தா அமர்த்தியுள்ளார்.

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் பிரசாரம், அணுகுமுறையை வடிவமைத்த அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோரை மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு வியூகம் வகுக்கும் பணியில் மம்தா  நியமனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றியை பெற்றது. மேற்கு வங்காளம் மாநிலத்தில் மம்தாவிற்கு அதிர்ச்சி கொடுத்து 42 தொகுதிகளில் 18 தொகுதிகளை பாரதீய ஜனதா கைப்பற்றியது. மாநிலத்தில் வாக்கு சதவீதமும் பா.ஜ.க.விற்கு உயர்ந்துள்ளது. 2021-ல் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. இப்போது ஜெகன்மோகன் ரெட்டியின் மிகப்பெரிய வெற்றிக்கு உதவிய பிரசாந்த் கிஷோரை மேற்கு வங்காள தேர்தல் பணிக்கு மம்தா பானர்ஜி அமர்த்தியுள்ளார். இது தொடர்பாக கொல்கத்தாவில் கிஷோரிடம் சுமார் இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக மம்தா ஆலோசனையை மேற்கொண்டுள்ளார். அப்போதுதான் இருதரப்பு இடையே பணிக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பிரசாந்த் கிஷோர் கடந்த வருடம் பீகாரில் ஆளும் கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் பிரசாந்த் கிஷோருக்கு பெரிய வேலைகள் எதுவும் கிடையாது. ஐக்கிய ஜனதா தளம் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளது. பிரசாந்த் கிஷோர் பணிகளால் நிதிஷ் குமாருக்கு பா.ஜ.க. அழுத்தம் கொடுக்கிறது.

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் வெற்றியை அடுத்து பிரசாந்த் கிஷோரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அணுகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்த் கிஷோர் 2014-ல் பிரதமர் மோடி வெற்றியடைய பெரும் உதவியாக இருந்தவர். 2015-ல் நிதிஷ் குமார் வெற்றியடையவும் பணியாற்றினார். 2017 உ.பி. தேர்தலில் காங்கிரசுக்காக அவர் பணியாற்றிய போது வியூகம் பெரும் தோல்வியை தழுவியது. இருப்பினும் பஞ்சாப்பில் அவருடைய பணி காங்கிரசுக்கு பயனளித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து