முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கிலவழி கல்விக்கட்டணம் ரத்து - 24 அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில் ஆங்கிலவழி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 

நிறைவேற்றப்படும்...

தமிழக சட்டசபையில் பள்ளி மற்றும் உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் செங்கோட்டையன் 24 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு:-

தமிழ்நாட்டிலுள்ள 120 கல்வி மாவட்டங்களில் ஏற்கனவே 32 மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது, மீதமுள்ள 88 கல்வி மாவட்டங்களிலும் தலா ஒரு பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ.17.60 கோடி செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழி மாணவர்களுக்கு கற்பிப்பு கட்டணம் கிடையாது. அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுடைய பெற்றோர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும், மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் ஆங்கில வழி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம்முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

செயல்படுத்தப்படும்...

தமிழகத்தில், சிறைச் சாலைகளிலுள் சிறைவாசிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 8, 10 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான அரசுத் தேர்வுகள் சிறைச்சாலை வளாகத்திலேயே நடத்தப்பட்ட வருகின்றன. தமிழக அரசின் இச்செயல்பாட்டிற்கு மேலும் மெருகூட்டும் வகையில் தமிழகத்தில் உள்ள சிறைச் சாலைகளில் கண்டறியப்பட்டுள்ள முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 757 சிறைவாசிகளுக்கு ரூ. 14.60 லட்சம் செலவில் அடிப்படை எழுத்தறிவை வழங்கிட பள்ளிக் கல்வித்துறையின் வாயிலாக சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

எழுத்தறிவினை...

தமிழ்நாட்டில், வளர்ச்சியில் முக்கியத்துவம் பெறும் இரண்டு மாவட்டங்களான விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி கண்டறியப்பட்டுள்ள 1,68,716 கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவினை வழங்கிடும் வகையில் ரூ.6.23 கோடியில்  2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித்திட்டம் செயல்படுத்தப்படும்.

குறுஞ்செய்தியாக...

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் வருகையை உறுதிப்படுத்தும் வகையிலும், மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளிக்கு வருகை புரிந்த தகவலை பெற்றோர்களுக்கு தெரிவிக்கும் வகையிலும் மாணவர்களின் வருகை குறித்த தகவல் அவர்களுடைய பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். ரூ.ஒரு கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். மாணவர்களிடையே அறிவியல் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் கற்பனைத் திறனை ஊக்குவிக்கும் புதுமைத் திட்டமாக 44 பள்ளிகளில் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது 223 பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, அறிவியல் உபகரணங்கள், உணர்விகள் மின்னணுவியல் கருவிகள், முப்பரிமாண அச்சுப்பொறிகள், தானியங்கிக் கருவிகள் கணினிகள் மற்றும் நுண்கட்டுப்பாட்டு பலகைகள் வழங்கப்படும். பள்ளி ஒன்றிற்கு ரூ. 20 லட்சம் வீதம் 223 பள்ளிகளுக்கு ரூ. 44.60 கோடி செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்படும்.

தனிக்கவனம்...

இணையப் பாதுகாப்பு, பாலினப் பாகுபாடு, பதின் பருவக்கல்வி, சுய விழிப்புணர்வு, பிறர் மனநிலை அறிந்து செயல்படுதல், மன அழுத்தம் மற்றும் உணர்ச்சிகளைக் கையாளும் திறன் போன்ற கருப்பொருள்களில் மாணவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் நோக்குடன், மாணவர்களின் பாதுகாப்புமற்றும் தனிக்கவனம் என்ற புதுமையான திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 2,34,69 ஆசிரியர்களுக்கு ரூ 18.39 கோடி செலவில் தேவையான பயிற்சி அளிக்கப்படும். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு 2381 அரசு நடுநிலைப் பள்ளிகளில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ரூ 16.83 கோடி செலவில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுவதுடன் குழந்தைமைய கற்றல் சூழல் ஏற்படுத்துவதற்கான வசதிகளும் உருவாக்கப்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உடல்நலன், மனநலன், பாலியல் சமநிலை பேணுதல், சத்துமிக்க உணவு, சுகாதாரம், போதைப் பொருட்களின் தீமை பற்றிய விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு, தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள், தன்சுத்தம், வன்முறை மற்றும் உடலில் ஏற்படும் காயங்களுக்கான பாதுகாப்பு மற்றும் முதலுதவிப் பயிற்சி போன்ற உடல் மற்றும் மனநலம் பேணுகின்ற வழிமுறைகள் கற்றுத் தரப்படும் வகையில் ரூ.12.31 கோடி செலவில் மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த நலவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

விரிவுபடுத்தப்படும்...

மாணவர்கள் தங்களுடைய பாடத் திட்டத்தோடு திறன் சார்ந்த கல்வியைப் பெறும் வகையில் 67அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து மீதமுள்ள 53 கல்வி மாவட்டங்களில் ஒரு கல்வி மாவட்டத்திற்கு ஒரு பள்ளி வீதம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூ. 6.10கோடி செலவில் தொழிற்கல்வி திட்டம் விரிவுபடுத்தப்படும்.

கூடுதல் மின்சார வசதி...

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோலவே இந்த கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் பட்டயக்கணக்காளர் சி.ஏ. படிப்பிற்கான வழிகாட்டு பயிற்சிகள் அளிக்கப்படும். மரபுசார் ஆற்றல் மூலங்களின் பயன்பாட்டைக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தும் பொருட்டு, 50 அரசுத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், கூடுதலாக மின்சார வசதி தேவைப்படும் 50 அரசு மேல்நிலைப் பள்ளிகள் ஆக மொத்தம் 100 அரசுப் பள்ளிகள் மற்றும் 44 மாணவியர் விடுதிகளுக்கு ரூ. 4.51 கோடி மதிப்பீட்டில் சூரிய ஒளிமின் வசதி ஏற்படுத்தப்படும்.

ரூ.3.20 கோடி செலவில்...

10 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் விடுதி, பயிற்சி அரங்கம், ஆய்வகம் ஆகியவற்றைப் பராமரித்தல் மற்றும் பழுதுபார்த்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். ரூ. 4.37 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். 32 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக கல்வித் தரத்தினை உறுதி செய்யவும், கற்றல் இடர்பாடுகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும், கற்றல் செயல்பாடுகளில் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை களையவும், சிறப்பு செயல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஒரு மாவட்ட பயிற்சி நிறுவனத்திற்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.3.20 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

உறைவிடப் பள்ளிகள்...

பின் தங்கியுள்ள சமூகத்தைச் சேர்ந்தகுழந்தைகளின் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம், மலையப்ப நகரிலும், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் வட்டம், வள்ளியூரிலும் இரண்டு புதிய உண்டு உறைவிடப் பள்ளிகள் தொடங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் நரிக்குறவர் சமூகத்தைச் சார்ந்த குழந்தைகள் பெரும்எண்ணிக்கையில் பயன் பெறுவார்கள். ரூ.2.84 கோடி செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டுகள் ரூ.1.17 கோடி செலவில் வழங்கப்படும்.

தேவையான பொருட்கள்...

மாறி வரும் கல்விச் சூழலில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் தர மேம்பாடு என்பது முக்கியத்துவம் பெறுகிறது. இதனை அடைவதற்கு, பணிமுன் பயிற்சியினை அளிக்கும் 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் உள்ள மொழி, கணிதம், அறிவியல், மற்றும் சமூக அறிவியல் ஆய்வகங்களுக்குத் தேவையான பொருட்கள் வழங்கி மேம்படுத்தப்படும். ரூ.1.50 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

புதிய கட்டிடங்கள்...

புதிய பாடப்புத்தகம் மற்றும் தகவல்தொழில் நுட்பம் தொடர்பான பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு அளிப்பதற்கும் மாணவர்களின் கற்றல் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் மொழிகள், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும்கல்வியியல், தொழில் நுட்பம் ஆகியவற்றிற்கான சிறப்புப் புலங்கள் உருவாக்கப்படும். ரூ.20 லட்சம் செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். சென்னை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், நூலகங்களை பொது மக்கள் அதிகளவில் பயன்படுத்துவதைக் கருத்தில் கொண்டு வாசகர்கள் பயன்பாடு அதிகமுள்ள, இலவசமாகக் காலிமனை பெறப்பட்டுள்ள 2 நூலகங்கள் தெரிவு செய்யப்பட்டு, அந்நூலகங்களுக்குப் புதிய கட்டிடங்கள் அமைத்து தரப்படும். நூலகமொன்றுக்கு ரூ.40 லட்சம் வீதம் ரூ.80 லட்சம் செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்படும்.

சிறப்பு பிரிவு தொடக்கம்...

வருங்கால இளைய தலைமுறையான குழந்தைகளின் கல்வியில் மிகுந்த அக்கறையுடன் பல்வேறு மாற்றங்களை தமிழ்நாடு அரசு புகுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, பள்ளிகள் வழியாக மாணவர்கள் கல்வித் திறன் பெறுவது மட்டுமின்றி பொது அறிவினை வளர்த்துக் கொள்வதற்கு ஏதுவாகவும் குழந்தைகளை ஆர்வத்துடன் நூலகத்தை நோக்கி ஈர்க்கும் வகையிலும் குழந்தைகளுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய சிறப்பு நூலகம், சேலம் மாவட்ட மைய நூலக வளாகத்தில் அமைக்கப்படும்.ரூ.50 லட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். பொது நூலகங்களைப் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி மாவட்டந்தோறும்செயல்படும் 32 மாவட்ட மைய நூலகங்களிலும் செவி திறனற்றோர் மற்றும் பேச்சுத் திறனற்றோருக்கான சிறப்பு பிரிவு தொடங்கப்படும். இப்பிரிவில் சைகை மொழிஅகராதி, உயர் கல்வி சார்பு சைகை மொழி குறுந்தகடுகள் மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் அனைத்து வசதிகளும் வழங்கப்படும். ஒரு மாவட்ட மைய நூலகத்திற்கு ரூ.1.50 லட்சம் வீதம் 32 மாவட்ட மைய நூலகங்களில் ரூ.48 லட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

மாணவ, மாணவியரின் வீட்டுப் பாடங்கள்தொடர்பான குறிப்புகளை எழுதி அனுப்பவும், அவர்களின் கற்றல் செயல்பாட்டினை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் கண்காணிக்கும் வகையிலும் ஏற்கனவே அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10, பிளஸ்1 மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு நாட்குறிப்பேடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு முதல் அத்திட்டத்தினை 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விரிவுபடுத்தி, அனைத்துஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ்2 வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு நாட்குறிப்பேடுகள் வழங்கப்படும்.

24 அறிவிப்புகளை...

மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த தமிழகத்திலுள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகங்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு கல்வி மாவட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பள்ளிக்கு ரூ.50,000 ஊக்க தொகை வழங்கப்படும். ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் ரூ.50,000 வீதம் 120 கல்வி மாவட்டங்களுக்கு ரூ.60 லட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். மாணவ, மாணவியரின் உடல்திறனை வளர்க்கும் பொருட்டு, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல்12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்குஆண்டு தோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே போன்று, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 3 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அவர்களுடைய விளையாட்டுத் திறனைக் கண்டறிந்து ஊக்குவிக்கும் பொருட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்திப் பரிசுகள்வழங்கப்படும்.  இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் 24 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து