முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணப்பட்டுவாடா புகாரால் நிறுத்தப்பட்ட வேலூர் எம்.பி. தொகுதியில் ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் - வரும் 11-ம் தேதி வேட்புமனுதாக்கல் ஆரம்பம்

வியாழக்கிழமை, 4 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

புது டெல்லி  : தமிழகத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. வரும் 11-ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்குகிறது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலின் போது முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், வேலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது அவருக்கு நெருங்கிய நண்பர்கள் வீட்டில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தியதில் புத்தம் புதிய பணம் கட்டுக்கட்டாக, பெட்டி பெட்டியாக கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்த தலைமை தேர்தல் ஆணையம், வேலூர் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்தது.
இந்நிலையில், வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.

தேர்தல் அட்டவணை

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவோர், வேட்பு மனுக்களை ஜூலை 11-ம் தேதி முதல், 18-ம் தேதி வரை தாக்கல் செய்யலாம். ஜூலை 19-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெற ஜூலை 22-ம் தேதி கடைசி நாள் ஆகும். அதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஆகஸ்ட் 9-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.

இந்த தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு எந்திரங்களுடன், ஒப்புகைச் சீட்டு வழங்கும் வி.வி.பாட் எந்திரங்களும் பயன்படுத்தப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தோல்வி அடைந்தார். தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து வசந்தகுமார் எம்.பி.யாக பதவியேற்றார். ஆனால் அதற்கு முன்பே அவர் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார். அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி எப்போது என்பது அறிவிக்கப்படவில்லை. அதே போல் விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. வேலூர் எம்.பி. தொகுதிக்கு மட்டுமே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து