முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா : தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய அமுதா ஐ.ஏஎஸ்

செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2024      ஆன்மிகம்
Amutha-IAS 2024-03-26

Source: provided

ஈரோடு : ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். தமிழக அரசு உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ், ஜ.ஜி. முருகன், பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. பண்ணாரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் மிக கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது. சுற்றுலா தலமான இக்கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர் கோவை, நீலகிரி மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். 

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடை பெறுவது வழக்கம். இத்திருவிழாவில் லட்சக்கணக்காண பக்தர்கள் வரிசையில் நாள்கணக்கில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்நிலையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வந்தது. 

கடந்த 11-ம் தேதி இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் குண்டம் திருவிழா தொட ங்கியது. இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் திரு வீதி உலா புறப்பட்டு பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம், உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திருவீதி உலா நடைபெற்றது. 

இதை தொடர்ந்து 19-ம் தேதி இரவு அம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து அன்றிரவு நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தினமும் இரவு கோவிலில் தினமும் மலைவாழ் மக்கள் தாரை, தப்பட்டை, பீனாட்சி வாத்தியத்துடன் அம்மன் புகழ்பாடும் களியாட்டமும், நித்தியப்படி பூஜையும் நடைபெற்றது. 

விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து எரி கரும்புகளை  காணிக்கை யாக செலுத்தி வந்தனர். இதையடுத்து கடந்த 24-ம் தேதி மாலை பரிவார தெய்வங்களான மாதேஸ்வரன், சருகுமாரியம்மன், வண்டிமுனியப்பன் மற்றும் ராகு, கேது தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 

நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையும், காலை 5 மணிக்கு குண்டத்திற்கு தேவையான கரும்பு வெட்ட செல்லும் நிகழ்ச்சியும் காலை 6 மணிக்கு அம்மன் மெரவணை ஊர்வலம் நடைபெற்றது. 

மாலையில் குண்டத்திற்கு எரிகரும்புகள் அடுக்கும் பணியும் இரவு 8 மணிக்கு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி இடப்பட்டு குண்டம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்த இரவு மழுவதும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து நேற்று அதிகாலை 2 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடை பெற்றது. அப்போது குண்டத்திற்கு இடப்பட்ட நெருப்பினை சிக்கரசம்பாளையம், இக்கரை நெகமம் புதூர் மற்றும் வெள்ளியம்பாளையம் கிராமங்களை சேர்ந்த பெரியவர்கள் மூங்கில் கம்புகளால் தட்டி நெருப்பினை சீராக பரப்பி 11 அடி நீளம் 5 அடி அகலத்தில் குண்டத்தை தயார் செய்தனர். 

தெப்பக்குளம் சென்ற அம்மன் சரியாக 3.15 மணிமுதல் 3.30 மணிக்குள் குண்டத்தின் முன்புறம் அம்மன் சப்பரம் வந்து சேர்ந்தபின் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. 

குண்டம் இறங்குவதற்கான லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.  இதையடுத்து சரியாக  அதிகாலை 3.45 மணிமுதல் 4 மணிக்குள் பூசாரி பார்த்திபன் குண்டம் இறங்கினார். அப்போது பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்து தாயே, பண்ணாரி அம்மா, காவல் தெய்வமே என பக்தி கோஷம் மிட்டனர். 

தமிழக அரசு உள்துறைச் செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ், ஜ.ஜி. முருகன், பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. பண்ணாரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து வீதி உலா கொண்டு செல்லப்பட்ட  சப்பரம் படைக்கலத்துடன் வந்த பக்தர்கள் உற்சவரை சப்பரத்தில் சுமந்தபடி குண்டம் இறங்கினர். 

அதை தொடர்ந்து வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அம்மனை வழி பட்டபடி குண்டம் இறங்கினர். இதில் சுமார் லட்சக்கண க்கான பக்தர்கள் தொடர்ந்து குண்டம் இறங்கி கொண்டே இருந்தனர். குண்டம் திருவிழாவில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.   

அதனை தொடர்ந்து மதியத்திற்கு மேல் சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கால்நடைகளை குண்டத்தில் இறக்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மதியம் மாவிளக்கு பூஜையும், இரவு புஷ்பரத ஊர்வலமும் நடைபெறுகிறது. 28-ம் தேதி மஞ்சள் நீராடுதலும், 29-ம்  தேதி மாலை சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை மற்றும் தங்க தேர் ஊர்வலமும் நடைபெறுகிறது. ஏப்ரல் 1-ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து