முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2024      ஆன்மிகம்
Thanjavur 2024-04-20

Source: provided

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேரின் அலங்கார பந்தல்கள் மின்கம்பிகளில் அடுத்தடுத்து சிக்கியது. அதனை தொடர்ந்து மின்கம்பிகளை  சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின் ஊழியர்கள் 2 பேர் காயமடைந்தனர்.  

தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்விழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் தினமும் நான்கு ராஜவீதிகளில் வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கியத் நாளான சித்திரை தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது.

கடந்த 2015 -ம் ஆண்டுக்கு பிறகு இக்கோவிலின் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி மேலவீதியில் 15-ம் தேதி சித்திரை தேரோட்டத்துக்கான முகூர்த்த கால் நடப்பட்டு, அன்று முதல் தேர் கட்டுமானப்பணிகள் நடைபெற்றன. இந்த தேர் சாதாரணமாக 19 அடி உயரமும், 18 அடி அகலமும், 40 டன் எடையும் கொண்டது. தேரை அலங்கரிக்கப்படும் போது, 50 அடி உயரமும் 43 டன் எடையும் அதிகரித்து காணப்படும். இந்த தேரில் 252 சுவாமிகளின் சிற்பங்களும், 165 வெங்கல மணிகளும் உள்ளன.

இதையடுத்து விழாவின் முக்கிய நாளான தேரோட்டம், நேற்று காலை 7 மணிக்கு நடைபெற்றது. தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர்  தீபக் ஜேக்கப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, சூரியனார்கோயில் ஆதீனம் ஸ்ரீகாரியம் சுவாமிநாதசுவாமி தேசிக சுவாமிகள், அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன், உதவி ஆணையர் கவிதா உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். 

இதையடுத்து தேங்காய் உடைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டு, தீபாரதனை காட்டப்பட்டு தேர் புறப்பட்டது. 

முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு தேரில் தியாகராஜ சுவாமியும் கமலாம்பிகா அம்பாளும் எழுந்தருளினர். சித்திரை தேருக்கு முன்பாக விநாயகர், முருகனும், பின்னால் அம்பாள், சண்டீகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் சிறிய தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது. தேரை பக்தர்கள் பாதுகாப்பாக வடம் பிடித்து செல்ல தேவையான ஏற்பாடுகளை காவல்த்துறை, தீணையப்புத்துறை, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து செய்திருந்தனர். 

பெரிய கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு தன்னார்வலர்கள் சார்பில் ஆங்காங்கே அன்னதானம், நீர்மோர், பானகம் ஆகியவை வழங்கினர்.

பெரிய கோயில் தேர் நிலையிலிருந்து புறப்படும் போது, அருகே இருந்த கட்டிடத்தில் தேர் அலங்கார சீலைகள் சிக்கின. பின்னர் அதனை சீரமைத்து சில நிமிடங்கள் கழித்து தேர் புறப்பட்டது. 

பின்னர் மேலவீதி கொங்கனேஸ்வரர் கோவில் அருகே சென்ற போது இருபுறமும் இருந்த மின் கம்பிகளில் தேர் சிக்கியது. பின்னர் தேர் தொம்மைகள், தேர் அலங்கார சீலைகளின் அகலம் குறைக்க ரம்பத்தால் அலங்கார கம்புகளின் அளவை குறைத்தனர். அதன் பின்னர் தேர் அங்கிருந்து புறப்பட்டது. 

சிறிது தூரம் சென்றதும் மீண்டும் மின்கம்பிகளில் சிக்கியது. அப்போது அருகே உள்ள மின்கம்பத்திலிருந்து ஊழியர்கள் சீரமைத்த போது, மின்கம்பத்திலிருந்து தளவாடப் பொருட்கள் கீழே விழுந்ததில், கீழே நின்று கொண்டிருந்த மணிகண்டன், வெங்கடேஷ் என்ற இரு மின் ஊழியர்கள் லேசான காயமடைந்தனர். பின்னர் தேர் மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி வழியாக தேர் நிலைக்கு வந்தடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து