முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகுதியும்-திறமையும் வாய்ந்த வீரர்களை ஊக்கப்படுத்த முதல்வர் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 31 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி, மே.31 - தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பதக்கம் வெல்ல அரசில் குறுக்கீடு இன்றி தகுதியும், திறமையும் வாய்ந்த வீரர்களை ஊக்கப்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி கூறினார்.  

தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி திருச்சி அண்ணாவிளையாட்டு அரங்கத்தில் உள்ள நீச்சல்குளம், ரூ.1 கோடியே 77 லட்சம் செலவில் கட்டப்பட்டுவரும் நவீன உள்விளையாட்டு அரங்கம், சர்வதேச தரத்துடன் கூடிய செயற்கை புல்வெளி ஆக்கிமைதானம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்த ஆய்விற்கு பின் தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிராமப்புறங்களில் தகுதியும், திறமையும் வாய்ந்த இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கும் வகையில், அவர்களை உற்சாகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் வரும் ஜூன் 3-ந்தேதி முதல் 5-ந்தேதிவரை தேசிய அளவிலான நீச்சல் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் சிறப்பிடம் பெறும் தமிழக வீரர், வீராங்கணைகளுக்கு சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கான சிறப்பு பயிற்சிகள் அளிக்க தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிகாலத்தில்தான் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கடந்த 91-ம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் ஆசியவிளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப்போட்டியில் பங்கேற்க விளையாட்டு வீரர்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர். அதனால்தான் சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு தமிழக வீரர்கள் பல பரிசுகளை பெற்றனர். 

பொதுவாக கிரிக்கெட்டில்தான் இளைஞர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. நகர்புறங்களில் டென்னிஸ் விளையாட்டும், கிராமப்புறங்களில் கபடி விளையாட்டும் பிரபலமாக உள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி கிராப்புறங்களில் டென்னிஸ், இறகுப்பந்து விளையாட்டுகளை ஊக்கப்படுத்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

இதனையொட்டி கிராப்புற இளைஞர்களை ஊக்கப்படுத்துவதற்காக தாலுகா அளவில் ஷட்டில் காக், டென்னிஸ் விளையாட்டுகளில் பயிற்சி பெறுவதற்கான மைதானங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் கலந்துகொண்டு பதக்கங்களை குவிக்கும் வகையில் எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் தகுதியும், திறமையும் வாய்ந்த வீரர்கள், வீராங்கணைகளுக்கே விளையாட்டில் முன்னுரிமை அளிக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

விளையாட்டு துறையில் காலியாக உள்ள பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புள்ளி விவரங்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தமிழகம் முழுவதும் உள்ள அரசு விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவியர்களுக்கு தரமான உணவு வழங்கவும், விளையாட்டு அரங்கங்களையும், விடுதிகளையும் சுத்தமாக வைத்திருக்கவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விளையாட்டு அரங்கங்களை செப்பனிட்டு சீரமைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தடகள வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக நவீன ஓடுதள பயிற்சி மைதானம் திருச்சியில் அமைக்க வேண்டும் என்ற தடகள வீரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் ஸ்குவாஸ் விளையாட்டு அரங்கு கட்டுமான பணிகளும் விரைவில் நிறைவடையும். 

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல்குளத்தில் நீச்சல் பயிற்சி பெறவரும் பெண்களுக்கு பயிற்சி அளிக்க விரைவில் பெண் பயிற்சியாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கட்டிட அமைப்பு செயற்பொறியாளர் அசோகன், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணை பொதுமேலாளர் சுந்தரம், திருச்சி மண்டல முதுநிலை மேலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட விளையாட்டு அலுவலர் கலைச்செல்வன், தேசிய தடகள வீரர் அண்ணாவி, அமைச்சரின் உதவியாளர் அன்பழகன், அ.தி.மு.க இளைஞரணி கோபிகண்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்