முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிழிந்த ஷுவை போட்டுக் கொண்டு ஓடினேன்! ஏழ்மையின் வேதனையே சாதனை படைக்க தூண்டியது: கோமதி

ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

சென்னை : போட்டியின் போது கிழிந்த ஷூவை போட்டுக் கொண்டு ஓடியதாகவும், ஏழ்மையின் வேதனையே ஆசிய தடகள போட்டியில் சாதனை படைக்க தூண்டியதாகவும் தங்க மங்கை கோமதி மாரிமுத்து கூறியுள்ளார்.

கத்தாரில் நடந்த ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் கோமதி. தாயகம் திரும்பிய அவருக்கு பாராட்டுகள் குவிகிறது. சென்னை வேலம்மாள் பள்ளி மற்றும் மயிலாப்பூர் தமிழிவியல் நிறுவனம் சார்பில் பாராட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கோமதி கூறியதாவது:-

எனது சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள சிறிய கிராமம். அப்பா மாரிமுத்து கூலி வேலை செய்து வந்தார். அம்மாவுக்கும் படிக்கக்கூட தெரியாது. படிக்கும் போது ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டு ஓடுவேன். பின்னர் பயிற்சிக்காக அதிகாலை 4.30 மணிக்கு என் அப்பா அழைத்து செல்வார். கிராமத்தில் இருந்து ஏரிக்கரை வழியாக செல்ல வேண்டும். மின் விளக்கு வசதி கிடையாது. பல நாள் டார்ச் வெளிச்சத்தில் தான் சென்றிருக்கிறோம். மழைக்காலங்களில் மிகவும் சிரமப்படுவோம்.

நான் நன்றாக சாப்பிட்டு தெம்பாக ஓடவேண்டும் என்பதற்காக அப்பா பல நாள் பட்டினி கிடந்துள்ளார். திருச்சி கல்லூரியில் படித்த போது மேரி எனது தோழி. இருவரும் ஓட்டப் பந்தயங்களில் ஓடுவோம். அவர் போலீஸ் வேலையில் சேர்ந்து சென்னைக்கு வந்து விட்டார். அவர்தான் சென்னைக்கு அழைத்து வந்து பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். அந்த நேரத்தில் என் தந்தையின் இழப்பு என்னை மிகவும் பாதித்தது. ஆனால் மேரிதான் எனக்கு ஆறுதலாகவும், ஊக்கமாகவும் இருந்தார். தொடர்ந்து பயிற்சி எடுத்தேன். ஆசிய தடகள போட்டியில் ஓடியபோது கிழிந்த ஷுவை போட்டுக் கொண்டு ஓடினேன். வெற்றி பெற வேண்டும் என்ற வெறியோடு ஓடியதால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தங்கம் வென்றதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த நேரத்தில் என் தந்தையும் இருந்திருதால் இன்னும் சந்தோசமாக இருந்திருக்கும். ஏழ்மையின் வேதனைதான் என்னை சாதிக்க தூண்டியது. தொடர்ந்து போராடி தமிழகம் சார்பில் விளையாடினேன். நான் வேறு மாநிலத்தில் அரசு வேலை பார்ப்பதால் தமிழகம் சார்பாக விளையாட பல பிரச்சினைகளை சந்தித்தேன். விடாமுயற்சி, தொடர் உழைப்பால் வெற்றி பெற்றுள்ளேன். என்னைப் போல் பல வீராங்கனைகள் ஏழ்மையில் இருக்கிறார்கள். வெளி உலகுக்கு வராமல் விடுதிகளில் தங்கி சரியான உணவு கூட கிடைக்காமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கும் அரசு உதவிகள் கிடைத்தால் இன்னும் பல பெண்கள் தங்கம் வெல்வார்கள்.தொடர்ந்து கடும் பயிற்சி மேற்கொண்டு சிறந்த விளையாட்டு வீராங்கனை ஆக வேண்டும். குறிப்பாக பி.டி.உஷாவின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் விளையாட வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி எடுக்க வேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகளின் உதவி கிடைத்தால் நிச்சயம் தங்கம் வெல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து