முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடப்பாடி பழனிசாமி அரசு நல்லாட்சிக்கு வழி வகுக்கும் : த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 3 வருடத்தை வெற்றிகரமாக கடந்து 4-ம் ஆண்டில் சிறப்போடு அடி எடுத்து வைப்பது தொடர் நல்லாட்சிக்கு வழி வகுக்கும் என்ற முழு நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று, சிறப்பாக செயல்பட்டு, வெற்றிகரமாக 3 ஆண்டுகளை நிறைவு செய்து 4-ம் ஆண்டின் தொடக்கத்தில் அடி எடுத்து வைப்பது வாழ்த்துக்குரியது, பாராட்டுக்குரியது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியைப் பின்பற்றி, தடம் புரளாமல் அவரது வழியில் ஆட்சியை நடத்துவது மட்டுமல்லாமல் திட்டங்களையும் அறிவித்து, செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இதற்கு உறுதுணையாக செயல்படுகின்ற தமிழக துணை முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் இந்த தருணத்திலே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சாமானியராக, சாதாரண மக்களோடு பழகக்கூடியவர்களாக செயல்படுவதால் தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிறார். அனைத்து துறைகளின் வளர்ச்சியை உறுதி செய்து கொள்ளும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு முதல்வர், வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீடுகளை ஈர்க்க மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது.

அதனை நிரூபிக்கும் வகையிலே சேலம் மாவட்டத்தில் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டியதும், சியட் நிறுவனத்தின் டயர் தொழிற்சாலையை தொடங்கி வைத்ததும் அடுத்தக்கட்டமாக தொழில் தொடங்குவதற்கு அடித்தளமாக அமைந்து விட்டது. டெல்டா பகுதி விவசாயத்தை காப்பாற்ற பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அதற்குண்டான நடவடிக்கைகளிலும் ஈடுபடத் தொடங்கி விட்டார்.

அனைத்து மாவட்டங்களிலும் கண்டிப்பாக ஒரு அரசு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும் என்பதற்காக புதியதாக மருத்துவக் கல்லூரிகள் அமைந்து வருவதற்கு வித்திட்டவர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, பாதுகாக்க சரியான நடவடிக்கைகளை தமிழக அ.தி.மு.க அரசு தொடர்ந்து எடுத்து வருவதையும் குறிப்பிடுகிறேன். குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் 16,382 கோப்புகளில் கையெழுத்திட்டு, வளர்ச்சித் திட்டப்பணிகளை நிறைவேற்ற பாடுபட்டிருப்பது பாராட்டத்தக்கது.

மேலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது பல துறைகளில் தமிழகம் முன்வரிசையில் அமரக்கூடிய தகுதி பெற்றதற்கும், வளமான தமிழகத்தை ஏற்படுத்துவதற்கும் கடின உழைப்பையும், தொடர் முயற்சியையும், சிறப்பான பணிகளையும் – அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொண்டு வரும் தமிழக முதல்வரின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது,

எனவே தமிழக வளர்ச்சிக்காக, தமிழக மக்கள் நலனுக்காக தமிழக முதல்வர் செய்து வரும் பணிகள் முதல்வர் தலைமையிலே மென்மேலும் சிறக்க, வளர, தொடர த.மா.கா சார்பில் வாழ்த்துகிறேன் எனக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து