முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வாபஸ்

திங்கட்கிழமை, 14 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.காமராஜ் ஆகியோருக்கு எதிராக அப்பாவு தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் இருந்து 3 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்துவதில் முறைகேடு செய்ததாக அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராகவும், ரேசன் அரிசியை நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி அதிக விலைக்கு விற்பனை செய்ததாக, அப்போதைய உணவுத்துறை அமைச்சர் காமராஜூக்கு எதிராகவும் தற்போதைய சபாநாயகர் அப்பாவு புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்காமல், புகார்களை பொதுத்துறை செயலாளரின் ஒப்புதலுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையை அனுப்பியுள்ளதாக குற்றம்சாட்டி, கவர்னரின் ஒப்புதலை பெற்று வழக்கு பதிய உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் அப்பாவு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில், முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான புகார் குறித்து லோக் ஆயுக்தா விசாரணைக்கு அனுப்பியுள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான புகாரை விரிவாக விசாரித்த தலைமைச் செயலர் புகாரில் அடிப்படை முகாந்திரம் ஏதும் இல்லை என முடிவெடுத்து புகாரை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மூன்று வழக்குகளும் நேற்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது சபாநாயகர் அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மூன்று வழக்குகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுவை திரும்பப் பெற அனுமதித்து மூன்று வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து