முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை நீர் முழுமையாக வடிந்தது: திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் மீண்டும் சுவாமி தரிசனம்

வெள்ளிக்கிழமை, 26 நவம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

திருச்செந்தூர் : மழை நீர் முழுமையாக வடிந்ததை அடுத்து திருச்செந்தூர் முருகன் கோவிலில் நேற்று வழக்கம்போல் பக்தர்கள் மீண்டும் சுவாமி தரிசனம் செய்தனர்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இதுவரை இல்லாத அளவில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக காயல்பட்டினம், திருச்செந்தூர், ஆறுமுகநேரி, தூத்துக்குடி நகர பகுதிகளில் இடைவிடாது பெய்த கனமழையால் பல்வேறு இடங்களிலும் சாலைகளில் வெள்ளம் தேங்கியது.

திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும் கோவில் கிழக்கு பகுதியில் கிரிபிரகாரத்தில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது. பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் கோவிலில் தேங்கிய மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் சுவாமி மூலவர் இருக்கும் மகாமண்டபத்திற்குள் மழைநீர் செல்லவில்லை. அதேநேரம் நாழிக்கிணறு கார்நிறுத்தும் இடத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் காத்துநின்று தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பணியாளர்கள் மின்மோட்டார் மூலமும், பொக்லைன் எந்திரம் மூலமும் வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சிலமணி நேரங்களில் வெள்ளம் வடிய தொடங்கியது. குறிப்பாக கோவிலை சுற்றி தேங்கிய மழைவெள்ளநீர் வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதன் காரணமாக சுப்பிரமணிய சுவாமி கோவிலை சுற்றி தேங்கிய வெள்ளம் சிறிது நேரத்தில் முழுமையாக வடிந்தது.

இதனால் நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் வழக்கம் போல் தரிசனம் செய்தனர். மேலும் திருச்செந்தூர் நகரப்பகுதிகளிலும் தேங்கி நின்ற மழைநீர் முழுமையாக வடிந்ததால் நேற்று  திருச்செந்தூர் இயல்பு நிலைக்கு திரும்பியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து