முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரபிரதேசத்தை அவசரப்பட்டு பிரிக்க வேண்டாம்: அத்வானி

வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

சண்டிகார், நவ.18  - உத்தரபிரதேச மாநிலத்தை அவசர கதியில் கூறுபோட வேண்டாம் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தை பூர்வாஞ்சல், குந்தல்காண்ட், ஆவத்பிரதேஷ், பச்சிம்பிரதேஷ் என்று நான்கு பிரிவுகளாகப் பிரிக்க உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி முடிவு செய்துள்ளார்.இந்த உத்தேச திட்டத்திற்கு அவரது அமைச்சரவை ஒப்புதலை வழங்கியுள்ளது. மாயாவதியின் இந்த திட்டத்திற்கு பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஏற்கனவே இரண்டாக பிரிக்கப்பட்டு உத்தரகாண்ட் என்ற மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே உத்தரபிரதேசத்தை மேலும் நான்கு மாநிலங்களாக பிரிக்க அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று எல்.கே. அத்வானி கூறியுள்ளார். சண்டிகாரில் செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றில் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பிரிக்கலாம்? வேண்டாமா? என்பதற்கு ஆம் என்றும் சொல்லவில்லை, வேண்டாம் என்றும் சொல்லவில்லை. ஆனால் அவசர கதியில் எதையும் செய்ய வேண்டாம் என்றும்மட்டும் அவர் கருத்து தெரிவித்தார். ஒரு மாநிலத்தை அவசர கதியில்  பிரிப்பதோ அல்லது ஒரு புதிய மாநிலத்தை உருவாக்குவதோ கூடாது என்று அவர் கூறினார்.  எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன்பாக மாநில மறு சீரமைப்பு ஆணையம் ஒன்றை அமைத்து அதன் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே எதையும் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
உத்தரபிரதேசத்தில் இருந்து உத்தரகாண்டையும், பீகாரில் இருந்து ஜார்க்கண்டையும், மத்திய பிரதேசத்தில் இருந்து சட்டீஸ்கரையும் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக இருந்ததால் அப்போது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது அவை அவ்வாறு பிரிக்கப்பட்டன என்று அப்போது 3 மாநிலங்கள் உருவாக்கப்பட்டதை அத்வானி நியாயப்படுத்தினார். மாயாவதியின் இந்த பிரிவினை திட்டத்திற்கு என்ன காரணமாக இருக்க முடியும்? என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார்.  மாயாவதி இந்த பிரிவினை திட்டத்தை ஏன் கொண்டுவந்துள்ளார் என்பதை தன்னால் அனுமானிக்க முடியவில்லை என்றும் அத்வானி கூறினார். லஞ்ச ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் 38 நாள் ரத யாத்திரையை மேற்கொண்டுள்ள எல்.கே. அத்வானி, நேற்று சண்டிகார் நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்