முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மநாபா கோயில் பொக்கிஷம் மதிப்பிடும் பணி ஆரம்பம்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஜன.24- திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபா சுவாமி கோயிலில் பொக்கிஷங்களை கணக்கிடும் பணி வரும் பிப்ரவரி மாதம் 17-ம் தேதி துவங்கும் என்று மதிப்பீட்டுக்குழுத்தலைவர் வேலாயுதம் நாயர் தெரிவித்துள்ளார். பத்மநாபா சுவாமி கோயிலில் 6 ரகசிய அறைகள் உள்ளன. அவைகளில் 5 ஐ திறந்து பார்த்தபோது அதில் குவியல் குவியலாக வைர கற்கள், வைர நகைகள், மரகதம், தங்கம், தங்க நகைகள் மற்றும் விலை மதிக்க முடியாத முத்துக்குவியல்கள் இருப்பது தெரியவந்தது. அவைகள் எடுக்கப்பட்டு கோயில் வளாகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. அவைகளில் களவு போவதாக கேரள மாநில எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும் 6-வது ரகசிய அறையை திறக்க கோயில் அறக்கட்டளை எதிர்ப்பு தெரிவித்தது. 6-வது அறையை திறந்தால் திறப்பவர் மரணமடைந்துவிடுவார் என்றும் அறக்கட்டளை சார்பாக அச்சுறுத்தப்பட்டது. இதனையொட்டி 6-வது அறையை திறப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் கடந்த வாரம் சுப்ரீம்கோர்ட்டு 5 ரகசிய அறைகளில் உள்ள நகைகளை மதிப்பீடு செய்ய உத்தரவிட்டது. இதற்காக தேசிய அருங்காட்சியக இயக்குனராக இருந்த ஆனந்த் போஸ் தலைமையில் ஒரு மதிப்பீட்டு குழுவும் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் ஆனந்த் போஸ் ஓய்வு பெற்றார். இதனையடுத்து புதிய தலைவராக மதிப்பீட்டுக்குழுவில் உள்ள வேலாயுதம் நாயுடுவை சுப்ரீம்கோர்ட்டு நியமித்தது. வேலாயுதம் நாயுடு தலைமையில் முதல் ஆலோசனை கூட்டம் பத்மநாபாசுவாமி கோயில் அருகே உள்ள ரங்கவிலாசம் அரண்மனையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதிப்பீட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ள தேசிய தொல்பொருள் துறை பாதுகாப்பு பிரிவு இயக்குனர் நம்பிராஜன், ரிசர்வ் வங்கி பிரதிநிதி விகாஸ் சர்மா, கோயில் நிர்வாக அதிகாரி ஹரிகுமார், ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி எம்.எஸ். கிருஷ்ணா, கேரள அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ஜெயக்குமார் மற்றும் திருவாங்கூர் மன்னர் குடும்ப பிரதிநிதி ஆகியோரும் கலந்துகொண்டனர். கூட்ட முடிவில் வேலாயுதம் நாயுடு கூறியதாவது:-

பத்மாநாபா சுவாமி கோயில் பொக்கிஷங்களை மதிப்பிடும் பணியை விரைவில் துவக்குமாறு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மதிப்பீட்டு பணிகளுக்காக சில உபகரணங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும் சில உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது. இந்த உபகரணங்கள் இன்னும் ஒருவாரத்தில் வந்து சேர்ந்துவிடும். அதன்பிறகு வரும் பிப்ரவரி மாதம் 17-ம் தேதி மதிப்பீட்டு பணிகளை துவங்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்