முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை 74-வது சுதந்திர தின விழா: கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி தேசிய கொடியேற்றுகிறார்

வியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020      தமிழகம்

நாட்டின் 74-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியேற்றி வைக்கிறார். இந்நிகழ்ச்சிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இது குறித்து அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

இந்தியத் திருநாட்டின் 74-வது சுதந்திரத் திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்வர் நாளை திங்கள் கிழமை 15-ம் தேதி காலை 8.45 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார். 

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொது மக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர்.  இந்த ஆண்டு கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளி  குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது. 

சுதந்திர போராட்ட தியாகிகளின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாகவும், மாவட்டந்தோறும் பத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொன்னாடை போர்த்தி உரிய மரியாதை செலுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் ஒவ்வொரு ஆண்டும், சுதந்திரத் தின விழாவின் ஒரு பகுதியாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தலைமை செயலக வளாகத்தில், இனிப்புப் பெட்டகம் வழங்கப்படுவது வழக்கம்.  இந்த ஆண்டு நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முதல்வரின் சார்பாக சமூக நலத் துறை அமைச்சர் மாற்றுத் திறனாளி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு நேரில் சென்று சமூக இடைவெளியை பின்பற்றி இனிப்பு பெட்டகத்தை மாணவர்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்களப்பணியாளர்களை சிறப்பிக்கும் விதமாக, அவர்களுக்கு முதல்வர், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.  சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா நோய் தொற்றை தவிர்க்கும் விதமாக இந்தாண்டு, பொது மக்கள், மாணவர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் விழாவைக் காண நேரில் வரவேண்டாம் எனவும், சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி / வானொலியில், கண்டு / கேட்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து