முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை, கோவை, சேலம் உட்பட 14 மாவட்டங்களில் ரூ.353 கோடியில் 25 துணை மின் நிலையங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

சனிக்கிழமை, 19 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று  (19.9.2020) தலைமைச் செயலகத்தில், எரிசக்தித் துறையின் சார்பில் ஈரோடு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை,  திருவாரூர்,  திருச்சி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் 353 கோடியே 11 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 25 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார். 

மின்பாதையில் ஏற்படுகின்ற மின் இழப்பையும், மின்பராமரிப்பு செலவினங்களையும் குறைத்து, ஒவ்வொரு பகுதிக்கும் தேவைப்படுகின்ற உச்சகட்ட மின் தேவையை நிறைவு செய்யும் வகையில் சரியான மின்னழுத்தத்துடன் சீரான  மின்சாரம் மக்களுக்கு வழங்கிட கூடுதல் துணை மின் நிலையங்கள் அமைப்பது அவசியமாகும் என்பதைக் கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்களை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு அமைத்து வருகிறது. 

அந்த வகையில், ஈரோடு மாவட்டம் - நம்பியூர் வட்டம், ந.மேட்டுப்பாளையத்தில் 10 கோடியே 61 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/11 கி.வோ. துணை மின் நிலையம்,  கள்ளக்குறிச்சி மாவட்டம் - சங்கராபுரத்தில்  177 கோடியே 93 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒரு 230/110 கி.வோ. துணை மின் நிலையம்,  கள்ளக்குறிச்சி மாவட்டம் -  ஆசனூர் சிட்கோ  மற்றும் வேலூர் மாவட்டம்- ஒடுகத்தூர் (தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையம்)  ஆகிய இடங்களில் 31 கோடியே 61 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு  110/33 கி.வோ. துணை மின் நிலையங்கள், சேலம் மாவட்டம் -  மின்னாம்பள்ளி, கள்ளக்குறிச்சி மாவட்டம் - மூங்கில்பாடி மற்றும் ஈரோடு மாவட்டம் - கணபதிபாளையம் (புஞ்சை காளமங்கலம்) ஆகிய இடங்களில் 34 கோடியே  75  லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான மூன்று 110/22 கி.வோ. துணை மின் நிலையங்கள்,  கோயம்புத்தூர் மாவட்டம் -செங்கத்துறை மற்றும் மகாத்மா காந்தி சாலை ஆகிய இடங்களில்  27 கோடியே  7 லட்சத்து  46  ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு 110/11 கி.வோ. துணை மின் நிலையங்கள், 

திருச்சிராப்பள்ளி மாவட்டம் - பூவாளூர், திருவள்ளூர் மாவட்டம் - திருநின்றவூர், கடலூர் மாவட்டம் - வளையமாதேவி (முகந்தரியாங்குப்பம்) மற்றும்   திருவாரூர் மாவட்டம் - கோவில்வெண்ணி ஆகிய இடங்களில்  12 கோடியே  94 லட்சத்து ஓரு ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான நான்கு  110/33 கி.வோ. துணை மின் நிலையங்கள் (விகிதாசார அறிமுகம்),  திருச்சிராப்பள்ளி மாவட்டம் - கல்லக்குடியில் 2 கோடியே  19 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான ஓரு  110/11 கி.வோ. துணை மின் நிலையம் (விகிதாசார அறிமுகம்), சென்னை  மாவட்டம் - நேர்மை நகர், கோயம்புத்தூர் மாவட்டம் -  கிட்டாம்பாளையத்தில் அண்ணா தொழிற் பூங்கா,  கிருஷ்ணகிரி மாவட்டம் - திம்ஜேப்பள்ளி, நாகப்பட்டினம் மாவட்டம் - குத்தாலம் மற்றும் திட்டச்சேரி,  தஞ்சாவூர் மாவட்டம் - திருவத்தேவன் மற்றும் கள்ளப்பெரம்பூர்,  திருவண்ணாமலை மாவட்டம் - மேல்செங்கம், வெள்ளேரி, மேக்களூர் மற்றும் தச்சாம்பாடி ஆகிய இடங்களில்   55 கோடியே   99 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான  பதினொன்று 33/11 கி.வோ. துணை மின் நிலையங்கள் என மொத்தம் 353 கோடியே 11 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 25 துணை மின் நிலையங்களை தமிழக முதல்வர் நேற்று திறந்து வைத்தார். 

கடந்த ஆண்டு, 2019-ல் தமிழக முதல்வர் லண்டன் பயணத்தின் போது, அங்கு இயக்கத்திலுள்ள ஸ்மார்ட் கிரிட்  தொழில்நுட்பத்தினை பார்வையிட்டார். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டிலும்  அத்திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்  என்ற உயரிய நோக்கில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக செயல்பட்டு,  மின் கட்டமைப்பு அலகுகளுக்கு ஏற்ப, காற்றாலை மின்சாரத்தின் உற்பத்தி அளவை நெறிபடுத்தும், சோதனை ரீதியான திட்டத்தை  (Artificial intelligence based Active grid Network Management system) இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான திட்ட ஒப்பந்த ஆணையை  பெங்களுருவில் உள்ள Enzen Global Solutions Private Limited என்ற நிறுவனத்திற்கு தமிழக முதல்வர் நேற்று வழங்கினார். இந்த புதிய தொழில்நுட்பமானது அதிக காற்றாலை மின் உற்பத்தியை மின் கட்டமைப்பில் ஒருங்கிணைப்பதோடு மின் கட்டமைப்பின் அலகு வேறுபாடுகளையும் நெறிபடுத்த உதவும். இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, தலைமைச்செயலாளர் சண்முகம், எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) எஸ்.கே.பிரபாகர் மற்றும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பங்கஜ் குமார் பன்சல், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து