முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டம்: காவலர்களிடம் மனுக்களை பெற்றார் முதல்வர் ஸ்டாலின்

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2022      தமிழகம்
CM-1 2022 09 22

சென்னை, காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று காவலர்களின் குறைகளை களைந்திடும் வகையில் உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காவலர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

மாநிலத்தின், அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளை கட்டுதல், ரோந்து வாகனங்களை வழங்குதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற  பல்வேறு திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், காவலர்களின் குறைகளை கேட்டு அவற்றை களைந்திட உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு சென்று காவலர்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளைக் கேட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து, முதல்வர், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் பதிவேட்டில் குறிப்பு எழுதி கையொப்பமிட்டார்.  முன்னதாக, சுற்றுச்சூழல் நலனை முன்னிறுத்தும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் மரக்கன்றினை நட்டு வைத்தார்.

இந்த நிகழ்வின்போது, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) தாமரைக்கண்ணன் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து