முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க விமான நிலையத்தில் அப்துல்கலாமுக்கு மீண்டும் அவமதிப்பு : இந்தியா கடும்கண்டனம்

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, நவ. 14 -  சோதனை என்ற பெயரில் அமெரிக்க விமான நிலையத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு மீண்டும் அவமதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பிரகாஷ் காரத் போன்ற தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  

கடந்த 2009 -ம் ஆண்டு ஏப்ரல் 21 -ம் தேதி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லியில் இருந்து அமெரிக்க விமானம் ஒன்றில் கிளம்பும்போது, பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி அமெரிக்க பாதுகாப்பு படையினர் அவரை சோதனை செய்து அவமதித்தனர்.  இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது அமெரிக்க பாதுகாப்பு படையினர் மீண்டும் அப்துல் கலாமை அவமானப்படுத்தி உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் 28 -ம் தேதி அப்துல் கலாம் நியூயார்க்கில் உள்ள ஜான் எப்.கென்னடி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி வந்தார். 

அப்போது அவரை அவமதிக்கும் வகையில் அமெரிக்க பாதுகாப்பு படையினர் நடந்து கொண்டனர். விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. அப்போது அமெரிக்க பாதுகாப்பு படையினர் விமானத்திற்குள் நுழைந்தனர். 

அப்துல் கலாம் அருகே வந்து அவரது சட்டையின் மேல் கோட்டையும், ஷூவையும் கழற்றி எடுத்துச் சென்றனர். அவற்றில் வெடிகுண்டு எதுவும் இருக்கிறதா என்று சோதனை செய்தார்களாம். 

இந்த சோதனைக்குப் பிறகு இரண்டையும் திருப்பிக் கொடுத்தனர். இந்த சோதனையின்போது, கலாம் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. அவரை அவமதிக்கும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

அப்துல் கலாமிடம் சோதனை நடத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் வந்தபோது, இந்திய அதிகாரி ஒருவர், அவர் முன்னாள் ஜனாதிபதி என்று கூறியிருக்கிறார். ஆனால் அவர்கள் அதை காதில் வாங்கிக் கொள்ளாமலேயே கலாமின் மேல் கோட்டையும், ஷூவையும் எடுத்துச் சென்று சோதனை இட்டனர். முன்னதாக விமான நிலையத்திலும் அப்துல்கலாமிடம் ஒருமுறை சோதனை நடந்ததாம். அதன்பிறகு விமானத்திற்குள் ஏறியும் அவரிடம் சோதனை நடத்தினார்களாம்.   இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கண்டனமும், அதிருப்தியும் தெரிவித்து இருக்கிறது. இதுபற்றி அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது, அப்துல்கலாம் அவமதிக்கப்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. 

பாதுகாப்பு என்ற பெயரில் இந்தியாவின் உயர் பொறுப்பில் இருந்தவர்களிடம் இப்படி நடந்துகொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அமெரிக்கா தனது கெடுபிடிகளை தளர்த்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கறாராக நடந்து கொள்வது இந்தியா - அமெரிக்க  பரஸ்பர கொள்கைக்கு இடையூறாக இருக்கும். 

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் சமீபத்தில், மும்பை வந்தபோது, அவரிடம் இந்தியாவில் எந்தவித சோதனையும் நடத்தப்படவில்லை. அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது. எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்படவேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.  மேலும் பிரகாஷ்காரத் போன்ற பல்வேறு தலைவர்களும் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்