முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்தால் அது எடப்பாடிக்கே சாதகமாக அமையும் - முன்னாள் தேர்தல் கமிஷனர்கள் தகவல்

செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தற்போது உள்ள சூழ்நிலையில் தி.மு.க கூட்டணி எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்தால் எடப்பாடிக்கே சாதகமாக அமையும் என்று முன்னாள் தேர்தல் கமிஷனர்கள் கோபாலசாமி, நரேஷ் குப்தா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால் சாமியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதலிலும் வருமாறு:-

கேள்வி:- தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையை கூட்டாவிட்டால் தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்யப்போவதாக ஒரு கருத்து நிலவுகிறது. அப்படி ராஜினாமா செய்தால் சட்டப்பேரவை தொடர்வதில் சட்ட சிக்கல் வருமா?

பதில்:- தி.மு.க உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக 89 பேரும் ராஜினாமா செய்தால் எந்த சட்ட சிக்கலும் வராது. எடப்பாடி அரசுக்கு ரொம்ப வசதியாக போய்விடும்.

கேள்வி:- அப்படியானால் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தொடரலாமா?

பதில்:- தாரளமாக தொடரலாம் சட்டப்பேரவையில் இருக்கும் மீதமுள்ள உறுப்பினர்களில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைத் தொடரலாம்.

கேள்வி:- ஒட்டுமொத்தமாக 89 உறுப்பினர்கள் ராஜினாமா செய்தால் அது அரசியல் நெருக்கடியை உருவாக்காதா?

பதில்:- எந்த நெருக்கடியும் உருவாகாது. சொல்லப்போனால் சட்டபேரவையில் எடப்பாடிக்கு இன்னும் எளிதாக போய் விடும். அ.தி.மு.கவினர் மகிழ்ச்சியடைவார்கள்.

கேள்வி:- ராஜினாமா செய்த தொகுதிகள் குறித்து தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கும்?

பதில்:- மீண்டும் அத்தனை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவார்கள்.

கேள்வி:- மொத்தமாக உறுப்பினர்கள் ராஜினாமா செய்வது என்பது எந்த விளைவையும் ஏற்படுத்தாதா?

பதில்:- ஒன்றும் ஏற்படுத்தாது, சற்றே பின்னோக்கி பார்த்தால் உங்களுக்குத் தெரியும் ஆந்திராவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கானா கோரிக்கையை முன் வைத்து மூன்று தடவைக்கு மேல் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த வரலாறு உண்டு. இவ்வாறு முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால் சாமி தெரிவித்தார்.

இதே கேள்வியை முன்னாள் தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் வைத்தபோது அவர் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவையில் ஒட்டுமொத்தமாக உறுப்பினர்கள் ராஜினாமா செய்தால் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையும். எதிர் வரிசையில் இருப்பபவர்களுக்கு மெஜாரிட்டி கூடி விடும் எந்தப் பிரச்சனையும் வராது. பொதுவாகத்தான் நான் இதில் கருத்து சொல்ல முடியும், ஆனாலும் பெரும்பான்மை ஆட்கள் ராஜினாமா செய்தால் எதிர் தரப்பினருக்கு ஆதரவு கூடும். பெரும்பான்மையை நிரூபிக்க சிக்கல் வராது. ஆனால் அதிகமான எம்.எல்.ஏக்கள் வைத்துள்ள அ.தி.மு.க பிரச்சனை இல்லாமல் தொடரத்தான் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அரசியல் ரீதியான பிரச்சனை இது இதில் அதிகம் கருத்து சொல்ல முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து