முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் தொழிற்சாலை அமைக்க வேண்டும்- மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி கோரிக்கை

வியாழக்கிழமை, 18 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : சேலத்தில் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்றும், கோவை மாவட்டம் சூலூர் விமானநிலையத்தில் ராணுவத்திற்கான பராமரிப்பு பழுது பார்ப்பு மையத்தை அமைக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கலைவாணர்  அரங்கில் நேற்று ராணுவ தொழில் வளர்ச்சி கூட்டம் தொடங்கியது. இந்த  கூட்டத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

வரவேற்கத்தக்கது

இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. உள்நாட்டு நிறுவனங்களுக்கு பாதுகாப்புத்துறை முக்கியத்துவம் கொடுப்பது வரவேற்கத்தக்கது. ஆட்டோ மொபைல்ஸ், ஜவுளி, தோல், எலக்ட்ரானிக்,  ஹார்ட்வேர், அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்டு வந்திருக்கும் வலுவான தொழில்துறை சூழ்நிலை காரணமாகவும், உயர் தேர்ச்சி, மனித வளம் பெருமளவில் கிடைப்பதன் காரணமாகவும் இது சாத்தியமாகி  இருக்கிறது. இதன் காரணமாக உலகதரத்தை நாம் சந்திக்க முடிந்துள்ளது.

120 நிறுவனங்கள் ...

தமிழ்நாட்டில் 70 என்ஜினியரிங் கல்லூரிகளில் வானூர்தி குறித்த தொழில்நுட்ப  பாட வகுப்புகளை நடத்தி வருகிறோம். இதில் ஆண்டுதோறும் 5 ஆயிரம் வானூர்தி தொழில்நுட்ப என்ஜினியர்கள் பட்டம் பெற்று வெளிவருகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள வானூர்தி தொழில்நுட்ப நிறுவனங்களில் நம்முடைய தொழில்நுட்பக் கலைஞர்களும், என்ஜினியர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொலைநோக்கு திட்டம் 2023-ஐ  அறிமுகப்படுத்தினார். இதில் வானூர்தி தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வானூர்தி தொழில்நுட்பத்துக்குத் தேவையான உதிரி பாகங்களை தயாரிப்பதில்  120 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

வேலைவாய்ப்பு...

பல்வேறு ராணுவ நிறுவனங்களுக்கும், அரசுத்துறை நிறுவனங்களுக்குமென 700-க்கும் மேற்பட்ட வினியோகஸ்தர்கள் இருந்து வருகிறார்கள். ஆட்டோ மொபைல் உற்பத்தித் திறனில் தமிழ்நாடு வலுவாக உள்ளது. இந்நிலையில் அடுத்த இலக்கு நமக்கு இருப்பது வானூர்தி தொழில்நுட்பம் மற்றும்  பாதுகாப்பு துறைதான். இந்தியாவில் வானூர்தி தொழில்நுட்பத்துக்கு தேவைப்படும் உபகரணங்களில் 30 சதவீத அளவை வழங்கும் வகையில் தமிழகம்  தன்னை தயாரபடுத்திக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் சுமார் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் உள்ளது. இத்தகைய நடவடிக்கையில் ஒன்று தான்  ஸ்ரீபெரும்புதூரில் உருவாகும் சென்னை வானூர்தி பூங்கா. முதல் கட்டமாக இந்தப் பூங்கா 250 ஏக்கரில் உருவாகி வருகிறது.

தயாராக இருக்கிறோம்

அடுத்தக் கட்டம் 500 ஏக்கர் அளவுக்கு விரிவுப்படுத்தப்படும். இந்தப் பூங்காவில்  50 வானூர்தி மற்றும் ராணுவத்துறை நிறுவனங்கள் இடம்பெறும். இவை  ஒரிஜினல் உபகரணங்கள் தயாரிக்கும் மத்திய அரசின் ராணுவத் துறை கொள்முதல்  கொள்கைக்கு வலுவான அடித்தளம் அமைக்கும். அதே சமயத்தில் விமானங்கள் பராமரிப்பு, பழுது பார்ப்பு, ஓவர்ஹால் மையம் சம்பந்தப்பட்ட பகுதியும் மிகவும்  முக்கியமானதாகும். ஆகவே சென்னையில் இந்த வானூர்தி பராமரிப்பு, பழுது  பார்ப்பு, ஓவர் ஹால் மைய வளாகத்தை அமைப்பதில் கவனம் செலுத்தி  வருகிறோம். தமிழ்நாட்டில் எந்த ஒரு இடத்திலும் தங்களது யூனிட்டை, கடைகளை ஏற்படுத்த பராமரிப்பு, பழுதுபார்ப்பு ,ஓவர் ஹாலிங் ஆபரேட்டர்கள்  முன் வந்தாலும் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

பரிசீலிக்க வேண்டும்

உத்தேசித்துள்ள மிகவும் மேம்பட்ட கணினி முறை கணக்கீடு, வடிவமைப்பு  என்ஜினியரிங் மையத்தை ரூ.180 கோடி செலவில் அமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இது 5 லட்சம் சதுர அடியில் உருவாகி வருகிறது. சென்னை வானூர்தி மற்றும் பாதுகாப்புத் துறை பூங்காவில் பன்னாட்டுக்கு  உற்பத்தி வளாகத்தை நாங்கள் அமைத்து வருகிறோம். இத்தகைய பின்னணியில்   தமிழ்நாட்டில் பொருத்தமான ஒரு இடத்தில் ஹால் நிறுவனத்தால் அமைக்கப்படும் ஹெலிகாப்டர் தொழிற்சாலை மற்றும் எளிய ரக போர்  விமானங்களை அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்  கொள்கிறேன். சேலத்தில் இந்த ஹெலிகாப்டர் தொழிற்சாலையை அமைக்கலாம் என்று  பரிந்துரை செய்கிறேன்.

முதலீடு செய்ய...

இதேபோல கோவை சூலூர் விமானப்படை நிலையத்தில் ராணுவத்துக்கான பராமரிப்பு பழுது பார்ப்பு ஓவர் ஹால் மையத்தை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் நடுத்தர சிறு தொழில் நிறுவனங்கள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இதில் முதலீடு செய்பவர்களுக்கு தேவைப்படும் நிலம் மற்றும் கட்டமைப்புகள் இதர வசதிகள் மின்சார வினியோகம் ஆகியவற்றை ஒற்றை சாளர முறையில் வழங்க தமிழ்நாடு  அரசு அனைத்து வகையிலும் உதவிடும். மாநிலத்தில் சுலபமாக தொழில் துவங்க  ஒரு கூட்டத்தையும் தமிழ்நாடு அரசு சமீபத்தில் இயற்றியுள்ளது. இதேபோல ஒரு கூட்டத்தை கோவை நகரிலும் நடத்தலாம். உங்கள் அனைவரையும் அன்போடும் மகிழ்ச்சியோடும் வரவேற்கிறேன். தமிழ்நாட்டில் முதலீட்டுக்கு வாருங்கள். தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்து உதவிகள், ஆதரவை அளிக்க நான் உறுதி கூறுகிறேன்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து