முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் கணவரின் தவறுக்கு நானே காரணம் வார்னரின் மனைவி கேன்டிஸ் உருக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

சிட்னி: பந்தை சேதப்படுத்தியதில் சிக்கி 12 மாதங்கள் தடைவிதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் செயலுக்கு தானே காரணம் என்று அவரின் மனைவி கேன்டிஸ் தெரிவித்துள்ளார்.

கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில்ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப் ஆகியோர் சிக்கினார்கள். இதில் டேவிட் வார்னர், ஸ்மித்துக்கு 12 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சூத்திரதாரியாக கருதப்பட்டவர் டேவிட் வார்னர். அவருக்கு அடுத்த ஒரு ஆண்டுக்கு சர்வதேச, உள்நாட்டு போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. கனத்த இதயத்துடன் சிட்னி வந்த வார்னர், ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, நடத்த தவறுக்கு தன்னுடைய பங்கும் இருக்கிறது. இதற்கு முழுப்பொறுப்பு ஏற்கிறேன். ஆஸ்திரேலிய மக்களையும், ரசிகர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டேன் என்று கண்ணீருடன் வார்னர் மன்னிப்பு கேட்டார். அதுமட்டுமல்லாமல், இனிமேல் ஆஸ்திரேலிய அணிக்கு விளையாடமாட்டேன் என்றும் தெரிவித்தார். இந்த வார்த்தையை கேட்டு அவரின் மனைவி கேண்டிஸ் கண்ணீர் விட்டார்.

இந்நிலையில், வார்னரின் மனைவி கேன்டிஸ் வார்னர், ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் ‘சண்டே டெலிகிராப்’ நாளேட்டுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில் என் கணவர் சிக்கியதற்கும், அந்த தவறைச் செய்ததற்கும் நான்தான் காரணம். அந்த குற்றஉணர்ச்சி என்னை கொல்கிறது. முழுமைக்கும் நானே காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

எனது கணவரின் செயலுக்கு நான் மன்னிப்பு கோரவில்லை. அவரை மன்னித்துவிடுங்கள் என்று கேட்கவில்லை. ஆனால், என்மீதும், என் குழந்தைகள் மீதும் விழுந்த அவதூறு பேச்சுக்களுக்கு பதிலடி கொடுக்கவே அவ்வாறு அவர் செய்துவிட்டார்.

எனது கணவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பாதியிலேயே திரும்பி வீட்டுக்கு வந்தபோது, படுக்கை அறையில் என் முன் கண்ணீர் விட்டு அழுவதைப் பார்த்து நானும், எனது குழந்தைகளும் வேதனை அடைந்தோம். அவரின் அழுகை என் இதயத்தை நொறுக்கிவிட்டது.

நாங்கள் கேப்டவுன் டெஸ்ட் போட்டியைப் பார்க்கச் சென்றிருந்தபோது, என்னுடைய முன்னாள் காதலரின் முகம் வரையப்பட்ட முகமூடியை மாட்டிக்கொண்டு ரசிகர்கள் என்னை கீழ்த்தரமாக கிண்டல் செய்தனர். என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தனர், என்னை பாட்டுப்பாடி கிண்டல் செய்தனர். ஆனால், அதை எல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தேன்.

எனது கணவர் தான் செய்த தவறுக்கு நிச்சயமாக வருந்துவார். அதேசமயம், ஆஸ்திரேலிய ரசிகர்களிடம் இருந்து பொறுமையையும், வார்னர் மீது இரக்கமும் வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன
இவ்வாறு கேண்டிஸ் வார்னர் தெரிவித்தார்.

வார்னரின் கோபத்துக்கு என்ன காரணம்?
2-வது டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கும், தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஓய்வறைக்கு வரும் போது இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. அப்போது, வார்னரின் மனைவி குறித்து டீகாக் அவதூறாக பேசியதால், டீ காக்கை அடிப்பதற்கு வார்னர் சென்றதாக கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.

டேவிட் வார்னர் தற்போது திருமணம் செய்திருக்கும் கேன்டிஸ் வார்னர் ஒரு பாப் பாடகி ஆவார். இவருக்கும் கறுப்பின ரக்பி விளையாட்டு வீரர் சோனி பில் வில்லியம்ஸுக்கும் காதல் இருந்தது. கடந்த 2007ம் ஆண்டுவரை இருவருக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்தது.

ஆனால், அதன்பின், இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு, அதன்பின் வார்னரை கேன்டிஸ் திருமணம் செய்தார். இந்த சம்பவத்தை குறித்தும், கேன்டிஸின் நடத்தை குறித்தும் டீகாக் விமர்சித்திருந்தார். அதனால்தான் அப்போது ஆவேசமாக நடந்து கொண்டதாக வார்னரும் தெரிவித்தார்.

இந்த சம்பவத்துக்கு பின் தென்ஆப்பிரிக்க ரசிகர்கள் கூட வார்னரை அவமானப்படுத்தும் நோக்கில், அவரின் மனைவியின் முன்னாள் காதலரும் ரக்பி வீரருமான வில்லியம்ஸின் முகமூடியை அணிந்து களத்தில் கிண்டல் செய்தனர்.

இது வார்னரை வெகுவாக பாதித்துவிட்டது. மேலும், அந்த நேரத்தில் களத்தில் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த வார்னரின் மனைவி கேன்டிஸ் மனதையும் பாதித்துவிட்டது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்த வேண்டும், பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் பந்தைசேதப்படுத்தும் திட்டத்தை வார்னர் செயல்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து