முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மத்திய பட்ஜெட் ஓரிரு வாரத்தில் வெளியாக உள்ள நிலையில் பொருளாதார சரிவு குறித்து பல்வேறு நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
2-வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முதலாவது பட்ஜெட்டை அடுத்த மாதம் 5-ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதற்காக அவர் ஏற்கனவே பல்வேறு துறை நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிவை சந்தித்து வருகிறது. வாகன விற்பனை குறைந்து, பெட்ரோல், டீசல் விற்பனையும் குறைந்துள்ளது. தொழிற்சாலைகளிலும் உற்பத்தி குறைந்து சரிவை சந்தித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் நேற்று முன்தினம் பொருளாதார வல்லுனர்கள் மற்றும் பல்வேறு துறை நிபுணர்களுடன் ஒரு ஆலோசனை கூட்டத்தை நிதி ஆயோக் நடத்தியது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு நிபுணர்களின் கருத்துகளை கேட்டறிந்தார். 40-க்கும் மேற்பட்ட பொருளாதார நிபுணர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அவர்கள் வேலைவாய்ப்பு, விவசாயம், நீர் ஆதாரம், ஏற்றுமதி, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் பொருளாதாரத்தின் தாக்கம் பற்றிய கருத்துகள் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி காண்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்கள். பொருளாதாரம் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதற்காக நிபுணர்களுக்கும், இதர பங்கேற்பாளர்களுக்கும் பிரதமர் மோடி தனது பேச்சின் போது நன்றி தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல், திட்ட அமலாக்க மந்திரி ராவ் இந்திரஜித் சிங், நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ்குமார் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் பற்றி பிரதமர் மோடி டுவிட்டர் வலைத்தளத்தில், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் பல்வேறு துறை நிபுணர்களுடன் கலந்துரையாடியது இனிமையானதாக இருந்தது. அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் அறிவுக்கூர்மையுடனும் நமது வளர்ச்சிப் பயணத்துக்கு பலன் அளிப்பதாகவும் இருந்தது என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து