முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்டோபர் 31-ம் தேதிக்குள் வாரந்தோறும் 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: பிரதமருக்கு அவசர கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்

திங்கட்கிழமை, 20 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அக்டோபர் 31-ம் தேதிக்குள் வாரந்தோறும் 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம் எழுதியுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முகாம்கள் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த சூழலில் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு அளித்து வரும் உதவிகள் மற்றும் தடுப்பூசி விநியோகத்திற்கு மத்திய அரசுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இருப்பினும் தடுப்பூசி பயன்பாடு தொடர்பான அளவீடுகளில் தேசிய சராசரியை விட தமிழகம் பின்தங்கி இருக்கிறது. இதற்கு முதல் நான்கு மாதங்களில் போதிய அளவில் தடுப்பூசி விநியோகம் செய்யப்படாததே காரணம். இந்த விஷயத்தில் அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தாலும், தடுப்பூசி கிடைத்த 2-3 நாட்களிலும் முழுவதுமாக தீர்ந்து விடுகின்றன. இந்த சூழலில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை அவசரமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே கடந்த 12ஆம் தேதி 28.91 லட்சம் டோஸ்களும், 19ஆம் தேதி 16.43 லட்சம் டோஸ்களும் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் போடப்பட்டுள்ளன. நடப்பு மாதத்தின் முதல் 19 நாட்களில் மட்டும் 4 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை தமிழக அரசு போட்டுள்ளது. இவ்வாறு தடுப்பூசி செலுத்துவதற்கான போதிய நடவடிக்கைகளை எடுத்தாலும், தேசிய சராசரியில் இருந்து தமிழகம் பின் தங்கியுள்ளது. இந்த விஷயத்தில் முன்னேற்றம் காண மாநில அரசால் தனியாக எதையும் செய்துவிட முடியாது.

வாரந்தோறும் 50 லட்சம் டோஸ்கள்

மத்திய அரசின் உறுதுணையும் தேவை. நேற்று வரை 3.97 கோடி டோஸ்களையும், 2.21 கோடி (0.5 மி.லி) ஏடி ஊசிகளையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. அதிக மக்கள்தொகை கொண்ட தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட குறிப்பிட்ட இடைவெளியில் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டியுள்ளது. எங்களின் கணக்கீட்டின் படி ஒரே வாரத்தில் 50 லட்சம் தடுப்பூசி டோஸ்களை முழுமையாக பயன்படுத்த முடியும்.

இதுதொடர்பான விரிவான விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். எனவே வாரந்தோறும் 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகள், அதற்கு இணையான 0.5 மி.லி ஏடி ஊசிகள் அல்லது 1 மி.லி/ 2 மி.லி ஊசிகளை அனுப்பி வைக்க வேண்டும். இதன்மூலம் வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் அனைத்து தகுதியான நபர்களுக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க முடியும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து