முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'நீட்' விலக்கு தொடர்பான வழக்கிலும் இது தொடரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2025      தமிழகம்
CM-1-2025-04-10

சென்னை, தி.மு.க. அரசு பெற்றுத்தரும் தீர்ப்புகள் ஒட்டுமொத்த ஜனநாயகத்துக்கும் வெளிச்சம் பாய்ச்சக் கூடியவை. கவர்னரின் அதிகாரம் என்ன என்பதை தெளிவாக்கிய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஒரு தொடக்கம். நீட் தேர்வு தொடர்பான வழக்கிலும் இது தொடரும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கவர்னர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு உள்ளிட்டவற்றை மேற்கோள் காட்டி மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சட்டப் போராட்டத்தின் வழியே திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைமையிலான அரசும் பெற்றுத் தருகின்ற தீர்ப்புகள் தமிழ்நாட்டின் நலனுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டுமொத்த ஜனநாயகத்துக்கும் வெளிச்சம் பாய்ச்சக் கூடியவையாக இருக்கும் என்பதுதான் வரலாறு.

கவர்னரின் அதிகார அத்துமீறல்களை ரத்து செய்து, மாநில உரிமைகளைக் காத்திடும் மகத்தான தீர்ப்பினை, திராவிட மாடல் அரசு முன்னெடுத்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கி இருப்பது வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படக்கூடிய நாள் ஆகும். தி.மு.க.வின் தலைவர் என்ற பொறுப்பிலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பிலும் உள்ள உங்களில் ஒருவனான நான் மாநில உரிமை காக்கும் சட்டப்போரில் சளைக்காமல் முதன்மையாக நிற்பேன்.

மும்மொழித் திட்டத்தை தேசிய கல்விக் கொள்கையின் வழியே மத்திய பா.ஜ.க. அரசு திணிக்க முயற்சிப்பதை எதிர்த்து நின்று, இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்கத்திற்கு இடமில்லை என்பதில் உறுதியாக நின்று, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க மறுத்தாலும் எங்கள் மாநில நலனைக் காக்கும் வகையில், மாநில அரசின் நிதியிலிருந்தே கல்விச் செலவுகளை எதிர்கொள்ளும் வலிமை எங்களுக்கு உண்டு என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறோம்.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்தியாவின் முன்னேற்றத்திற்கான மனித வள ஆற்றலாகத் தமிழ்நாட்டின் கட்டமைப்பை உருவாக்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் மறுசீரமைப்பில் பாராளுமன்றத் தொகுதிகளைக் குறைப்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிடுகிறது என்றதுமே, தமிழ்நாட்டைப் போல பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, பாராளுமன்ற மக்களவையில் தற்போதுள்ள வகையிலேயே மாநிலங்களுக்கான விகித்தாசாரம் தொடர வேண்டும் என்பதையும், மறுசீரமைப்புத் திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் முதல் குரல் கொடுத்திருப்பதும், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முன் கை எடுத்திருப்பதும் உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசுதான்.

நியாயமும் வலிமையும் கொண்ட குரல் எல்லாத் திசைகளிலும் எதிரொலிக்கும். பாராளுமன்றக் கூட்டத் தொடரில் நமது திராவிட முன்னேற்றக் கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்களின் குரல் ஓங்கி ஒலித்தது. தோழமைக் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து நியாயத்தை எடுத்துரைத்தது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமு.க எனத் தமிழ்நாட்டின் 39 மக்களவை எம்.பி.க்களும், மாநிலங்களவையில் உள்ள கழக எம்.பி.க்களும் இந்த பாராளுமன்றக் கூட்டத்தொடர் முழுவதையும் தம் வயப்படுத்தி, மாநில நலனை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவின் நம்பிக்கை குரலாக ஒலித்தார்கள்.

சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெறுள்ள அறிவிப்புகள் தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் நலன்களையும் உள்ளடக்கியதகாவும் பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை மேம்பாட்டை மையப்படுத்தியும் அமைந்துள்ளன. 2024-25-ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு 9.69 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து நிற்பதும், பரவலாக்கப்பட்ட வளர்ச்சியின் மூலம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளும் ஏற்றம் பெற்று, பெண்கள் பங்கேற்புடனான வேலைவாய்ப்புகள் பெருகியிருப்பதும் மத்திய அரசின் புள்ளிவிவரத்தின் மூலமாகவே வெளிப்பட்டுள்ளது.

இந்த வளர்ச்சியை அடைவதற்கும் தொடர்வதற்கும்தான் மாநில உரிமைகளுக்கான நமது போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு மைல்கல்லாக ஏப்ரல் 8-ம் நாள் வெளியான மகத்தான தீர்ப்பு அமைந்துள்ளது. பள்ளிக்கல்வியிலும் உயர்கல்வியிலும் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வரும் நிலையில், இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் முதன்மை இடங்களைப் பிடித்துள்ளதை அனைவரும் அறிவோம்.

இந்தப் பெருமையைச் சிதைக்கும் வகையில், பல்கலைக்கழக வேந்தர் என்ற அதிகாரத்தைக் கொண்டிருந்த கவர்னர் உயர்கல்வியில் அறமற்ற அரசியலைப் புகுத்தி, காவிச் சாயம் பூசிக்கொண்டிருப்பதற்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றுக்கு ஒப்புதல் தராமல், ஜனநாயக மாண்புகளைச் சிதைக்கும் அதிகார அத்துமீறல்களைத் தொடர்ந்து கொண்டிருந்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

கவர்னர்களின் அதிகார அத்துமீறலுக்கு எதிரான வழக்குகள் என்பவை சுப்ரீம் கோர்ட்டிற்கு புதியதன்று. மத்திய பா.ஜ.க. அரசு தன்னால் வெற்றிபெற முடியாத மாநிலங்களில், மாற்றுக் கட்சி அரசுகளின் செயல்பாடுகளைத் தடுப்பதற்காகவே கவர்னர்களை நியமித்து, ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்றத்தைக் கூட்டுவதற்கே கவர்னர் மறுத்துவந்த நிலையில் அது தொடர்பான வழக்கும் தொடரப்பட்டது. மேற்கு வங்கம், கேரளா என பா.ஜ.க. அல்லாத அரசுகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள பா.ஜ.க. கவர்னர்களின் அத்துமீறல்கள் தொடர்பாகவும் வழக்குகள் உள்ளன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே செயல்படுவார் என்றும், பல்வேறு பல்கலைக்கழகங்களின் நிர்வாக செயல்பாடுகள் தொடர்பாகவும் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளை கவர்னர் கிடப்பிலேயே போட்டிருந்ததையும், தன் அதிகாரத்திற்கு மீறிக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருந்ததையும் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து தீர்ப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 8 அன்று காலையில் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்கச் சென்ற நிலையில், தீர்ப்பு வெளியாக இருப்பதாகத் தகவல் கிடைத்தது.

தமிழ்நாடு கவர்னரின் செயல்பாடு சட்டவிரோதமானது என்பதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது சட்டமன்றத்தில் நிறைவேற்றுகின்ற தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது நியமனப் பதவியில் உள்ள கவர்னரின் வேலை என்பதையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வின் தீர்ப்பு தெளிவாகத் தெரிவித்தது. இந்தச் செய்தி, சட்டமன்றக் கூட்டத்தொடரில் இருந்த உங்களில் ஒருவனான எனக்குக் கிடைத்தவுடன், உடனடியாக அவையில் இருந்து வெளியே வந்து, இந்த மகிழ்ச்சிகரமான வெற்றிக் தீர்ப்பு குறித்த அறிவிப்பை எழுதி, அவைக்குச் சென்று அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் வாசித்தேன்.

எந்தச் சட்டமன்றத்தில், தமிழ்நாடு என்று இந்த மாநிலத்திற்குப் பெயர் சூட்டி மாநில உரிமைகளின் குரலை அண்ணா உரக்க முழங்கினாரோ, எந்தச் சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை கலைஞர் நிறைவேற்றினாரோ அந்த சட்டமன்றம்தான் வலிமையானது, ராஜ்பவனுக்கு அதிகாரமில்லை என்று சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பைப் பாராட்டி அறிவிப்பை வெளியிட்டேன்.

முதலமைச்சரான என் அறிவிப்பைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் உள்ள தோழமைக் கட்சிகளின் உறுப்பினர்கள், மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை ஆதரித்துப் பேசினார்கள். இந்த வழக்குத் தொடரப்பட்டதிலிருந்தே வழக்கறிஞர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து, மாநில உரிமைகளை நிலைநாட்ட எடுத்து வைக்க வேண்டிய வாதங்கள், ஆதாரங்கள் குறித்து கலந்துரையாடி வந்தேன். கழகம் எப்போதும் சொல்லி வருவது போல, கவர்னர் பதவி என்பது மத்திய - மாநில அரசுக்கிடையிலான தபால்காரர் பணிதான் என்பதை சுப்ரீம் கோர்ட் தெளிவாகத் தீர்ப்புரைத்திருக்கிறது.

மாநில உரிமைக்கான திராவிட முன்னேற்றக் கழக அரசின் தொடர் சட்டப் போராட்டத்தில் இந்தத் தீர்ப்பு முக்கியமான வெற்றி என்பதால், தங்கள் மாநிலங்களில் கவர்னரின் அத்துமீறல்களால் ஜனநாயகத்தைக் காக்கப் போராடுகிற அரசுகளும் தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு பெற்றுத் தந்துள்ள தீர்ப்பினை முன்மாதிரியாக வைத்து தங்களின் வழக்குகளை முன்னெடுத்துச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. 

தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் கவர்னரின் அத்துமீறல்களைத் தகர்த்தெறிந்த வெற்றித் தீர்ப்பு வெளியான வேகத்தில், தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப்போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் ஏப்ரல் 9-ம் நாள் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

சமூக நீதியிலும் மாணவர்களின் நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர். சமூகநீதிக்கும் – மாணவர்களுக்கும் - மக்களுக்கும் எதிரான பா.ஜ.க.வினர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றதும், அவர்களின் வழியில் முதன்மை எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வினரும் புறக்கணித்து தங்கள் எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்தினர்.

மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடியான தி.மு.க., நீட் தேர்விலும் விலக்கு பெறும் வகையில் தமிழ்நாட்டின் தனித்தன்மையை சட்டப் போராட்டத்தின் வழியே முன்னெடுக்கத் தீர்மானித்து, ஆதரவு சக்திகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. கவர்னரின் அதிகாரம் என்ன என்பதை தெளிவாக்கிய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஒரு தொடக்கம். நீட் தேர்வு தொடர்பான வழக்கிலும் இது தொடரும். மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி என்று கருணாநிதி மொழிந்த முழக்கத்தை முன்வைத்து நீதியின் வாயிலாக இந்தியாவின் ஜனநாயகத்தையும் கூட்டாட்சித் தன்மையையும் காத்திடும் பேரியக்கமாக தி.மு.க. தன் போராட்டத்தைத் தொடரும். இவ்வாறு அக்கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து