முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா தொடர்ந்த வழக்கில் கிடைத்த மிகப்பெரும் வெற்றி - 32 ஆண்டுகாலம் நடந்த காவிரி பிரச்சினையில் நல்ல தீர்ப்பை தமிழக அரசு பெற்று தந்துள்ளது - கொடைக்கானல் விழாவில் முதல்வர் எடப்பாடி பெருமிதம்

சனிக்கிழமை, 19 மே 2018      தமிழகம்
Image Unavailable

கொடைக்கானல் : அம்மா தொடர்ந்த வழக்கில் மிகப் பெரும் வெற்றி கிடைத்துள்ளது. 32 ஆண்டு காலம் நடந்த காவிரி பிரச்சினையில் திறமையாக வாதாடி தமிழக அரசு நல்ல தீர்ப்பை பெற்றுத் தந்துள்ளது என்று முதல்வர் எடப்பாடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

கொடைக்கானலில் நேற்று மலர்க்கண்காட்சியை துவக்கி வைத்து முதல்வர் எடப்பாடி பேசினார். இந்த விழாவில் அவர் பேசியதாவது,

காவிரி நதிநீர் என்பது ஒரு ஜீவநதி. இன்றைக்கு காவிரி நதிநீரிலிருந்து தான் 20 மாவட்டங்கள் குடிநீர் ஆதாரங்களை பெறுகின்றன. காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக எம்.ஜி.ஆர். 1986ஆம் ஆண்டு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கடிதம் மூலம் கோரிக்கை வைத்தார். மத்திய அரசும் நடுவர் மன்றம் அமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது. பிறகு 205 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று நடுவர் மன்ற ஆணையமும் ஆணையிட்டது. இறுதி தீர்ப்பை  2007-ல்  வழங்கியது. நடுவர் மன்ற ஆணையம் வழங்கிய தீர்ப்பை மத்திய அரசு கிடப்பில் போட்டது. அரசிதழில் வெளியிட காலம் தாழ்த்தியது. ஆனால் அம்மா(ஜெயலலிதா) உச்சநீதிமன்றத்திலே வழக்கு தொடர்ந்து, உச்சநீதிமன்றம் 2013-ல் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பிலே மத்திய அரசு உடனடியாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டது. அதன் வாயிலாக, மத்திய அரசு நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது. நடுவர் மன்ற ஆணை வழங்கிய தீர்ப்பின்படி 192 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினார் அம்மா. ஆனால் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால், அம்மா  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அம்மா தொடர்ந்த வழக்கை அம்மாவின் அரசு திறமையாக அனைத்து ஆதாரங்களுடன் திறமையான மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடியதன் விளைவாக இன்றைக்கு நல்ல வாதங்களை எடுத்து வைத்து உச்சநீதிமன்றத்திலே நேற்றைய தினம் 32 ஆண்டுகாலம் நடந்து வந்த காவிரி நதிநீர் பிரச்சினை தீர்வு காண்கின்ற வகையில் உச்சநீதிமன்றத்திலிருந்து நல்ல தீர்ப்பை தமிழ்நாடு அரசு பெற்று தந்துள்ளது. 

தமிழக மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் மெரினா கடற்கரை எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் தொடர்ந்து 80 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்தவர் அம்மா. யார், யாரோ பேசுகிறார்கள். விவசாயிகளுக்காக நன்மை செய்தோம் என்று. ஆனால் நன்மை செய்தவர் அம்மாதான்.  சட்டத்தின் மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய பங்கு நீரை பெறுவதில் சட்டப் போராட்டம் நடத்திய அம்மா, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை பெற்று தருவதற்காக தனது இறுதி மூச்சு வரை போராடினார். அம்மாவின் அரசு தொடர்ந்து அறவழியில் போராடி வெற்றி பெற்று தந்துள்ளது.  காவிரி நதிநீர் பெறுவதற்கு மற்ற கட்சிகளை விட அதிக அக்கறை எடுத்துக் கொண்ட கட்சி அ.தி.மு.க. அம்மா இந்த பூமியிலிருந்து மறைந்தாலும், அவர் செய்த சாதனைகள் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், இரா. துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து