முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய குழு மீண்டும் சென்னையில் ஆய்வு: அமைச்சர், அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை

வியாழக்கிழமை, 9 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய குழுவினர் சென்னையில் 3-வது முறையாக நேற்று ஆய்வு செய்தனர். மேலும் சுகாதார துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் மத்திய குழுவினர் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக  மத்திய சுகாதார துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையில் மத்திய குழு தமிழகம் வந்துள்ளது. இக்குழுவில் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திர ரத்னு உள்ளிட்ட 7 பேர் இடம்பெற்றுள்ளனர். முதல் குழு கடந்த ஏப்ரல் மாத இறுதியிலும், அதன் பின்னர் 2-வது குழுவும் சென்னையில் ஆய்வு செய்தது. தமிழகத்தில் தொற்று பரவல், கொரோனா தொற்றால் உயிரிழப்பு, கட்டமைப்பு வசதிகள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த தற்போது 3-வது முறையாக மத்திய குழு தமிழகம் வந்துள்ளது. பெங்களூருவில் இருந்து மத்திய குழு தலைவரான மத்திய சுகாதார துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா நேற்று முன்தினம் சென்னை வந்தார். அவருடன் மின்னணு மருத்துவ ஆவண இயக்குனர் டாக்டர் ரவீந்திரா வந்தார். இவர்கள் சென்னை வந்த உடன் ஆய்வு செய்வதற்காக செங்கல்பட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.  அதேபோல் மத்திய குழுவில் இடம்பெற்றுள்ள மத்திய அரசு இணை செயலாளர்கள் ராஜேந்திர ரத்னு, சுஹாஸ் தந்துரு ஆகியோர் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர். இந்த குழுவினருடன் மத்திய நோய் பரவல் தடுப்பு நிபுணர் டாக்டர் பிரவீன், ஜிப்மர் டாக்டர்கள் சுவரூப் சாகு, சதீஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

3 நாள் பயணமாக வந்துள்ள இந்த குழு நேற்று தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் கொரோனா தொற்று நிலைமை, இதனை தடுக்க அரசு எடுத்துள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், அளிக்கப்படும் சிகிச்சைகள், இதுவரை எவ்வளவு பேர் அனுமதி, எவ்வளவு பேர் டிஸ்சார்ஜ் போன்ற அனைத்தும் கேட்டறிந்தனர்.  சென்னையில் அதிதீவிரமாக இருந்த கொரோனா பரவல் இப்போது படிப்படியாக குறைந்து வருவது பற்றியும் மத்திய குழுவுக்கு கருத்து சொல்லப்பட்டது. சென்னை மாநகராட்சியில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கும் சென்று ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து பிற்பகலில் சென்னை மாநகராட்சி பகுதியில் செயல்படும் பரிசோதனை மையங்களை பார்வையிட்டனர். மாலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த கிண்டி கிங் நிலையத்தில் உள்ள அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையையும், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உள்ள சிறப்பு மையத்தையும் பார்வையிட்டனர். அதன் பின்னர் புளியந்தோப்பு பகுதிக்கு சென்று அங்கிருந்து எழும்பூர் மருத்துவ அலுவலகத்தில் மருந்துகள் இருப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். அதை தொடர்ந்து மத்திய குழுவினர் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று மாலை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர். இதில் மதுரை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், சேலம், தேனி, இராணிப்பேட்டை மற்றும் விருதுநகர் ஆகிய 11 மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசின் கண்காணிப்பு இணை செயலாளர் ராஜேந்திர ரத்னூ, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி, மக்கள் நல்வாழ்வு குடும்ப நலத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து