முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டசபையில் 2020-21 ஆண்டுக்கான கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை : துணை முதல்வர் ஓ.பி.எஸ்.தாக்கல் செய்தார்

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கடந்த திங்கள் கிழமை தொடங்கிய தமிழக சட்டசபை நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று  3-வது நாள் சட்டசபை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கிய முதல், கொரோனா, நீட், பிரதமர் கிசான்  திட்டத்தில் முறைகேடு  உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், முக்கியமாக, வரதட்சணைச்  கொடுமைக்கான தண்டனை  குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மேலும், பாலியல் தொழிலுக்காக சிறார்களை விலைக்கு வாங்கினால் குறைந்தப்பட்சம் 7 ஆண்டு சிறை.  பெண்களை பின் தொடர்தல் குற்றத்திற்கு தண்டணை 7 ஆண்டுகளாக அதிகரிப்பு. 18 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து, சட்டசபையில் நடப்பு ஆண்டிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். 2020-21 ஆண்டுக்கான கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை  தாக்கல் செய்யப்பட்டது.

துணை நிதிநிலை அறிக்கையில் கொரோனா நோயாளிகளுக்கான உணவு, மருத்துவ செலவுகளுக்காக ரூ. 3,359.12 கோடி கூடுதல் தொகை துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் குடும்ப  அட்டைதாரர்கள், நலவாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.4,218.20 கோடி சேர்க்கப்பட்டுள்ளது. தொற்று மருந்துகள், நோய் கண்டறியும் சாதனங்கள், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை வசதி உள்ளிட்டவைகளுக்கு ரூ.1.109 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. 

தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின்கீழ், பல்வேறு திட்டங்களை செயல்படுத்திட வேளாண்துறைக்கு ரூ.107.40 கோடி அனுமதி அளிக்கப்படுகிறது.

விவசாயிகள் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் திட்டத்தினை செயல்படுத்த மாநில அரசின்  மானியமாக ரூ. 316.80 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கியின் மூலதன கோட்பாட்டை பின்பற்ற ரூ. 437 கோடி ஒதுக்கீடு. தேனி, திருப்பூர் மாவட்டங்களில்  கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்க ரூ. 82.60 கோடி ஒதுக்கீடு.   தனியார் கரும்பு உற்பத்தி ஆலைகள், விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் ஆதாய விலைக்கான நிலுவைத் தொகை வழங்க ரூ.170.28 கோடி ஒதுக்கீடு.  5 புதிய மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கு ரூ.646.26 கோடி ஒதுக்கீடு. மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சிகளுக்கு 14-வது மத்திய நிதி ஆணையத்தின் 2-ம் தவணை பொது அடிப்படை மானியத்திற்கு ரூ.987.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து