முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய சாதனைகளை படைத்து தமிழக மக்கள் வாழ்க்கையில் உயர வேண்டும்: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். புத்தாண்டு வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : புதிய சாதனைகளை படைத்து தமிழக மக்கள் தங்கள் வாழ்வில் மேலும் உயர்வடைய வேண்டும் என்று புத்தாண்டையொட்டி அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளனர்.  

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு மலருகின்ற இந்த நன்னாளில், பேரன்பு கொண்ட தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.  பழம்பெருமையும், இலக்கிய வளமும் நிறைந்த நம் தாய்மொழியாம் தமிழ் மொழி பேசும் தமிழ் மக்கள், பன்னெடுங்காலமாய் பருவங்களின் சுழற்சியினையும், வான் சாஸ்திர கோட்பாடுகளையும் ஆய்ந்து அறிந்து அதன் அடிப்படையில் ஆண்டாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றார்கள்.

புதிய சாதனைகளைப் படைத்து, புதிய வெற்றிகளைப் பெற்று, வழிமறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, தமிழக மக்கள் தங்கள் வாழ்க்கையில் மேலும் உயர்வடைய, அ.தி.மு.க. முழு அர்ப்பணிப்புடன் மக்கள் பணியாற்றும் என்பதை இந்நாளில் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம். 

இப்புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், இன்பமும் பெருக வேண்டும். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். தமிழர் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது வழியில் மனதார வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எங்களது உளமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை அன்போடு உரித்தாக்கிக் கொள்கிறோம்.  இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து