முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சார் பதிவாளர்கள் தங்கள் இருக்கையினை சமதளத்தில் அமைக்க வேண்டும் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை

வியாழக்கிழமை, 22 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: பொதுமக்களுக்கு வெளிப்படையான சேவையினை உறுதி செய்யும் வகையில் சார்பதிவாளர்கள் தாங்கள் அமர்ந்துள்ள மேடையினைச் சுற்றியுள்ள தடுப்பினை உடனடியாக அகற்றி தங்கள் இருக்கையினைச் சமதளத்தில் அமைக்க வேண்டும் எனப் பதிவுத்துறைத்தலைவர்  தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

வணிகவரி துறை அமைச்சர் மூர்த்தி  சமீப காலமாகச் சார்பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு பல சீர்திருத்தங்களை நடைமுறைபடுத்தி வருகிறார். பதிவுத்துறைச் செயலர் மற்றும் பதிவுத்துறைத் தலைவருடன் கோயம்புத்தூர் மற்றும் சேலம் மண்டலங்களில் அமைச்சர் சென்ற வாரம் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டபோது பதிவு அலுவலர்கள் தங்களது அலுவலகத்தில் உயர்ந்த மேடையில்  அமர்ந்து பதிவுப் பணி செய்து வருவதால்.  பொதுமக்களை மரியாதையுடன் நடத்தி அவர்களுக்கு பதிவுச் சேவையினை வழங்குவது சிரமமாக உள்ளது கண்டறியப்பட்டது.

 எனவே, இனிவரும் காலங்களில் பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேடையில் அமராமல் சரிசமமாக அமர்ந்து பதிவுப் பணியினைச் செய்ய வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  சார்பதிவாளர் அலுவலகங்களில் அனைத்து சேவைகளும் கணினி மயமாக்கப்பட்ட நிலையிலும் அரசுக்குச் செலுத்தும் கட்டணங்கள் யாவும் இணைய வழியாகவே செலுத்தப்படுவதால் சார்பதிவாளர்கள் பணத்தைக் கையாள வேண்டிய அவசியமில்லாத நிலையிலும் இந்த உயர்மேடைகள் தற்போது தேவையில்லை என்பதால் பதிவு அலுவலர்களின்  இருக்கையினைச் சமதளத்தில் அமைத்து சுற்றியுள்ள தடுப்புகள் உடனடியாக                          நீக்கப்பட வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு வெளிப்படையான சேவையினை உறுதி செய்யும் வகையில் சார்பதிவாளர்கள் தாங்கள் அமர்ந்துள்ள மேடையினைச் சுற்றியுள்ள தடுப்பினை உடனடியாக அகற்றி தங்கள் இருக்கையினைச் சமதளத்தில் அமைக்க வேண்டும் எனப் பதிவுத்துறைத்தலைவர்  தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து