முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை தி.நகரில் எம்.ஜி.ஆர்., வி.என். ஜானகிக்கு சிலை : ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

புதன்கிழமை, 30 நவம்பர் 2022      தமிழகம்
ops- 2022 08 04

Source: provided

சென்னை : மேலும், சென்னை, தியாகராய நகரில் எம்.ஜி.ஆரின் நினைவு இல்லத்தில், உரிய அனுமதி பெற்று, எம்.ஜி.ஆர். மற்றும் அவரது மனைவி வி.என்.ஜானகி அம்மையார் ஆகியோருக்கு முழுஉருவ வெண்கலச் சிலைகள் அமைக்கப்படும்

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் மனைவியும், முன்னாள் முதல்வருமான மறைந்த வி.என்.ஜானகி அம்மையாரின் 100-வது பிறந்தநாள் விழா தொடக்கத்தினையொட்டி அவருக்கு என் வணக்கத்தினையும், மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் நலன்களுக்காக அ.தி.மு.க. என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை எம்.ஜி.ஆர். ஆரம்பித்தபோது, சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தை கட்சிக்காக கொடுத்த வள்ளல் ஜானகி அம்மையார். இந்த இடத்தில்தான் தலைமைக்கழகம் எம்.ஜி.ஆர். மாளிகை என்ற பெயரில் இன்றளவிலும் செயல்பட்டு வருகிறது. 

கட்சியின் ஒற்றுமைதான் முக்கியம் என்ற பொது நோக்கோடு செயல்பட்ட ஜானகி அம்மையாரின் புகழ், அவர் செய்த தியாகம் என்றென்றும் அனைவர் உள்ளங்களிலும், குறிப்பாக அ.தி.மு.க. தொண்டர்களின் உள்ளங்களில் நிலைத்து நிற்கும். எம்.ஜி.ஆர். மாளிகையில் தரை தளத்தில் உள்ள முக்கியப் பிரமுகர் அறைக்கு வி.என்.ஜானகி அம்மையார் பெயர் சூட்டப்பட வேண்டுமென்றும், முதல் தளத்தில் உள்ள கூட்ட அறைக்கு அம்மா பெயர் சூட்டப்பட வேண்டுமென்றும் கோரிக்கைகள் கட்சி தொண்டர்களால் என்னிடம் வைக்கப்பட்டுள்ளன. 

இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை. மேலும், சென்னை, தியாகராய நகரில் எம்.ஜி.ஆரின் நினைவு இல்லத்தில், உரிய அனுமதி பெற்று, எம்.ஜி.ஆர். மற்றும் அவரது மனைவி வி.என்.ஜானகி அம்மையார் ஆகியோருக்கு முழுஉருவ வெண்கலச் சிலைகள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து