முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ செயலாளர், துணைத்தளபதியிடம் பாராளுமன்ற நிலைக்குழு விசாரணை

புதன்கிழமை, 4 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.- 5 - கடந்த ஜனவரி மாதம் தலைநகர் டெல்லியை நோக்கி ராணுவம் முன்னேறிச் சென்றதாக வெளியான செய்தியை தொடர்ந்து ராணுவத்துறை செயலாளர் மற்றும் ராணுவ துணை தளபதி ஆகியோரிடம் பாராளுமன்ற நிலைக்குழு நேற்று விசாரணை நடத்தியது. கடந்த ஜனவரி மாதம் 16 மற்றும் 17 ம் தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவில் அரியானா மாநிலம் ஹிசாரில் இருந்து ராணுவ கவச வாகனங்கள் டெல்லியை நோக்கி முன்னேறிச் சென்றதாக சமீபத்தில் ஒரு பத்திரிகையில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் தனது வயது சர்ச்சை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை அணுகிய நாள் அன்றுதான் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.  இந்த செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உண்மையில் அன்றைய தினம் டெல்லியை நோக்கி ராணுவம் நகர்ந்து சென்றதா என்பது குறித்து பதிலளிக்க ராணுவ செயலாளர் சசிகாந்த் சர்மா, ராணுவ துணைத் தளபதி எஸ்.கே.சிங் ஆகியோரை நேரில் ஆஜராகுமாறு பாராளுமன்ற நிலைக்குழு கேட்டுக்கொண்டது. அதன்படி இவர்கள் இருவரும் நேற்று இக்குழு முன்பு நேரில் ஆஜரானார்கள். அப்போது அவர்களிடம் பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர். ராணுவத்தைப் பற்றிய இந்த செய்தி நாட்டு மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றும் இது மக்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே உள்ள உறவு சம்பந்தமானது என்றும் எனவே இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற செய்தி உலக நாடுகள் மத்தியில் தவறான தகவலை அளிப்பதாக உள்ளது என்றும் அக்குழு உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். இதையெல்லாம் கருத்தில் கொண்ட குழுவின் தலைவர் சத்பால் மகராஜ், இவர்கள் இருவரையும் வருகிற 9 ம் தேதி மீண்டும் இந்த குழு முன்பு ஆஜராக வேண்டும் என்றும், அப்போது இதுகுறித்த அனைத்து தகவல்களையும் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்