முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் சட்டவிரோத சுரங்கங்களுக்கு சுப்ரீம்கோர்ட்டு திடீர் தடை

சனிக்கிழமை, 30 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.- 30 - கர்நாடக மாநிலத்தில் சட்டவிரோத சுரங்கங்களுக்கு சுப்ரீம்கோர்ட்டு தீடீரென்று தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை அந்த சுரங்களில் பணிகள் எதுவும் நடக்கக்கூடாது என்றும் அந்த தடை உத்தரவில் கூறப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் சட்டவிரோத சுரங்க தொழில் ஏகபோகமாக நடைபெற்று வருகிறது. இவைகளில் இருந்து அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிலருக்கு பணம் போய்கொண்டியிருக்கிறது என்று லோக்ஆயுக்தா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டையொட்டி கர்நாடக மாநில பாரதிய ஜனதாமுதல்வர் எடியூரப்பா பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் பணியில் பாரதிய ஜனதா மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக இரும்பு தாது வெட்டி எடுக்க சுப்ரீம்கோர்ட்டு தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும்வரை அவைகளில் பணிகள் எதுவும் நடக்கக்கூடாது என்று தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா மற்றும் நீதிபதிகள் அப்டாப் ஆலம்,ஸ்வதன்தர் குமார் ஆகியோர் அடங்கிய சுப்ரீம்கோர்ட்டு பெஞ்ச்  இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் இந்த சட்டவிரோத சுரங்க தொழிலால் சுற்றுப்புறச்சூழல் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படியும் மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகத்திற்கும் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. உருக்கு உற்பத்திக்கு எவ்வளவு இருப்புத்தாது தேவை? சுரங்கங்களில் இருந்து எவ்வளவு இரும்புத்தாது எடுக்கப்பட்டுள்ளது? என்ற விபரத்தை கொடுக்கும்படியும் அமைச்சகத்தை சுப்ரீம்கோர்ட்டு கேட்டுள்ளது. அவ்வப்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதும் உருக்கு உற்பத்தி விஷயத்தில் இது அமுல்படுத்தப்படவில்லை என்றும் சுப்ரீம்கோர்ட்டு குற்றஞ்சாட்டியுள்ளது.
கர்நாடகத்தில் நடைபெற்று வரும் சட்டவிரோத சுரங்க தொழிலில் இருந்து எடியூரப்பா,கர்நாடக அமைச்சர்களான ரெட்டி சகோதர்கள், முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் 600-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு வருவாய் கிடைத்துள்ளது என்று லோக்ஆயுக்தா குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தவும் அந்த அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் லோக்ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. புதிய நீதிபதியாக சிவராஜ் பாட்டீல் பதவி ஏற்றுக்கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்