முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை போராட்டம்: ஐயப்ப தர்ம சேனா தலைவர் ஈஸ்வர் கைது

திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

பாலக்காடு : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்வதை தடுத்து போராட்டம் நடத்தியது தொடர்பாக ஐயப்ப தர்ம சேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் கைது செய்யப்பட்டார்.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்த தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சபரிமலை போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் அமைப்புகளில் ஒன்றாக ஐயப்ப தர்ம சேனா செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் ஈஸ்வர் இருந்து வருகிறார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் பெண்கள் செல்ல முற்பட்டபோது மோதல் நடந்த நிலையில் அதுதொடர்பாக ராகுல் ஈஸ்வர் மீது கேரள போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். சபரிமலையில் பெண் பத்திரிகையாளர்களை தாக்கியதாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பத்திம்திட்டா மாவட்டம் ரன்னியில் உள்ள கீழ் நீதிமன்றம் ராகுல் ஈஸ்வருக்கு ஜாமீன் வழங்கி இருந்தது.

ஆனால் ஜாமீன் பெற்ற ராகுல் ஈஸ்வர் தொடர்ந்து சபரிமலை போராட்டத்தை தூண்டிவிடுவதாக போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ராகுல் ஈஸ்வருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது.

இந்த நிலையில் பாலக்காட்டில் ஐயப்ப சேவா சங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராகுல் ஈஸ்வர் வந்து இருந்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். அவரை பாலக்காடு காவல் நிலையம் அழைத்து சென்ற போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து