முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. கூட்டத்தொடர் மேலும் 10 நாட்கள் நீடிக்க வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை மேலும் 10 நாட்கள் நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியகியுள்ளது. நிலுவையில் உள்ள மசோதாக்களை நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. இது தொடர்பாக, பா.ஜ.க எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கூட்டத்தொடர் நீட்டிப்பு குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூன்-17ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரில் இடைக்கால சபாநாயகர் எம்.பி. வீரேந்திரகுமார், புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து 19-ம் தேதி புதிய சபாநாயகர் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில், காலாவதியான 46 சட்ட மசோதாக்கள் மீண்டும் தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தொடர் வரும் 26-ம் தேதியோடு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல முக்கிய மசோதாக்களை இரு அவைகளிலும் நிறைவேற்ற மத்திய அரசுக்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. அதற்காக, இந்த கூட்டத்தொடர் நீடிக்கப்படலாம் என கடந்த ஒரு வார காலமாகவே தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், இதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இருப்பினும், இது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வந்தது.

இந்த நிலையில், நேற்று காலை பா.ஜ.க. கட்சி கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. அதில் பா.ஜ.க. எம்.பி.க்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, பாராளுமன்ற கூட்டத்தொடர் மேலும் 10 நாட்களுக்கு நீடிக்கப்படலாம் என தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடைபெற்று வரும் கூட்டத்தொடரிலேயே, நிலுவையில் உள்ள அனைத்து மசோதாக்களை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நடைபெற்று வரும் கூட்டத்தொடரில், பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. மேலும், வாடகை தாய் ஒழுங்கு முறை மசோதா,  அண்மையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய தேசிய மருத்துவ ஆணை மசோதா, அணை பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் இன்னும் விவாதமே நடத்தப்படாமல் உள்ளன. எனவே, இவற்றை முடிக்க வேண்டுமானால் அரசுக்கு கூடுதலாக கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, பாராளுமன்ற கூட்டத்தொடர் 10 நாட்களுக்கு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து