முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரறிவாளன் விடுதலை மனநிறைவை தருகிறது : ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிக்கை

புதன்கிழமை, 18 மே 2022      தமிழகம்
EPS-OPS 2022 04 12

Source: provided

சென்னை : 30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த  பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்திருப்பது, அ.தி.மு.க.விற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும், நிம்மதியையும் தருகிறது என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் கூட்டாக  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த  பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்திருப்பது, அ.தி.மு.க.விற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும், நிம்மதியையும் தருகிறது. ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட வேண்டும். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற 6 பேருக்கும் நீதி வழங்க வேண்டும் என்பதற்காக அம்மா மேற்கொண்ட முயற்சிகள், எடுத்து வைத்த சட்ட நுணுக்கங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாநில அமைச்சரவையின் தீர்மானத்தின்படி பேரறிவாளனையும், அவரோடு இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் மற்ற 6 பேர்களையும் எனது தலைமையிலான அரசு விடுதலை செய்யும் என்று 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அம்மா சட்டமன்றத்தில் அறிவித்ததை நன்றியோடு நினைவு கூறுகின்றோம்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற 6 பேர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை அம்மாவும், அவரைத் தொடர்ந்து 2018-ல் அம்மாவின் வழிநடந்த அ.தி.மு.க. அரசும் துணிச்சலாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தான் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பிற்கு அடித்தளமாகும்.

இது முழுக்க, முழுக்க அ.தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றிதான் என்பதையும் இந்தத் தருணத்தில் நாங்கள் எடுத்துக்கூற கடமைப்பட்டு இருக்கிறோம். பேரறிவாளனை விடுவிக்குமாறு சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ள நிலையில், அவரை உடனே விடுதலை செய்யவும், மேற்படி  தீர்ப்பின் அடிப்படையில் மீதமுள்ள 6 பேர்களை உடனடியாக விடுதலை செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து