முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கப்பலூர் டோல்கேட்டை அகற்றிட வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் முற்றுகை போராட்டம் : போக்குவரத்து முடங்கியதால் வாகனங்கள் ஸ்தம்பிப்பு

புதன்கிழமை, 10 ஜூலை 2024      தமிழகம்
RBU 2024-07-10

Source: provided

திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் டோல்கேட்டை அகற்றிட வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அப்போது கப்பலூர் டோல்கேட் மற்றும் முக்கிய சாலைகளில் குறுக்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் 9 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முடங்கி திருமங்கலம் நகரம் ஸ்தம்பித்தது.

திருமங்கலம் நகரின் எல்லைக்கு மிகவும் அருகிலுள்ள கப்பலூர் நான்கு வழிச்சாலையில் உபயோகிப்பாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும் டோல்கேட் விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது.  இங்கு நான்கு வழிச்சாலையை பயன்படுத்திடாமல் சர்வீஸ் சாலையின் வழியாக சென்றிடும் திருமங்கலம் பகுதி உள்ளுர் வாகனங்களிடம் அவ்வப்போது டோல் கட்டணம் கேட்பதும், அதற்கு திருமங்கலம் பகுதியிலுள்ள வாடகை மற்றும் சொந்த வாகனங்களின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதும் வாடிக்கையான ஒன்றாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே சர்வீஸ் சாலையை மட்டுமே பயன்படுத்தி செல்லும் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த உள்ளுர் வாகனங்கள் உரிய ஆவணங்களை காட்டி கட்டண விலக்கு பெற்று பயணம் மேற்கொண்டு வந்தன. 

சர்வீஸ் சாலையை பயன்படுத்தி சென்றிடும் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த உள்ளுர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு சலுகை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கு மாறாக தற்போது கட்டண விலக்கு ரத்து செய்யப்பட்டு நேற்று முதல் 50சதவீத சுங்க கட்டணம் செலுத்திச் சென்றிட வேண்டும் என கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் அறிவித்தது.

இந்த அறிவிப்பு திருமங்கலம் தொகுதி உள்ளுர் வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து  திருமங்கலம் நகரில் அனைத்து கட்சியினர் மற்றும் அனைத்து சங்கங்கள்,வாடகை மற்றும் சொந்த உபயோக வாகனங்களின் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் இணைந்து தேசிய நெடுஞ்சாலை விதிகளை மீறி  அமைக்கப்பட்டுள்ள கப்பலூர் டோல்கேட்டை வேறு இடத்திற்கு மாற்றிட வலியுறுத்தி முன்னாள் அமைச்சர்  ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நேற்று கப்பலூர் டோல்கேட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

மேலும் டோல்கேட்டின் குறுக்கே தரையில் அமர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கட்சி நிர்வாகிகள் மற்றும் போராட்டக்குழுவினருடன் இணைந்து டோல்கேட்டை அகற்றிட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார். 

இதனிடையே கப்பலூர் டோல்கேட் மற்றும் திருமங்கலம் நகரைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகளின் குறுக்கே ஏராளமான வாகனங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  நிறுத்தினர். இதனால் திருமங்கலம் நகரின் வழியாக சென்றிடும் தேசிய நான்குவழி நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் 5கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கட்சி நிர்வாகிகள் மற்றும் போராட்டக்குழுவினர் 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றினர். அப்போது அதிகளவில் திரண்ட போராட்ட குழுவினர் போலீஸ் வாகனங்கள் முன்பாக மறியலில் ஈடுபட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரை போலீஸ் வேன்களிலிருந்து கீழே இறக்கினர். 

இதனை தொடர்ந்து திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு கூட்டத்தில் ஆர்.டி.ஓ. சாந்தி,தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட அலுவலர் பரத்வாஜ், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், டி.ஸ்.பி.அருள், ஏ.டி.எஸ்.பி. கருப்பையா, சிட்கோ தொழிலதிபர்கள் சங்க தலைவர் ரகுநாதராஜா மற்றும் போராட்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதில் முடிவு எட்டப்படாத நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கப்பலூர் டோல்கேட்டில் முற்றுகை போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் காலை 9 மணிக்கு துவங்கிய முற்றுகை போராட்டம் மாலை 6 மணியை தாண்டி 9 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. 

இதனால் தேசிய நெடுஞ்சாலை எண் 44-ல் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.இருப்பினும் மாவட்ட கலெக்டர் தொலைபேசியில் அளித்த உத்தரவாதத்தின் பேரில் வரும் 15-ம் தேதி திங்கள் கிழமை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் அதுவரையில் திருமங்கலம் பகுதி உள்ளுர் வாகனங்கள் வழக்கம் போல் கட்டண விலக்கு பெற்று இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து 9மணி நேர முற்றுகை போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

எனினும் வரும் திங்கள் கிழமை பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாவிட்டால் மீண்டும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 9மணி நேரமாக நீடித்து வந்த பரபரப்பான முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்து நடுவழியில் நின்றிருந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கிளம்பிச் சென்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து