முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகளுடன் ஆண்டுக்கு ஒரு முறையாவது தமிழகம் வாருங்கள் : அமெரிக்கவாழ் தமிழர்களுக்கு முதல்வர் அழைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2024      உலகம்
CM-1 2024-09-08

Source: provided

சிகாகோ : ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்குக் குழந்தைகளோடு வாருங்கள் என்று அமெரிக்கவாழ் தமிழர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். 

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். சிகாகோ நகரில் சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்கவாழ் சந்திப்பு நிகழ்ச்சியில் பட்டு வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன். நம்முடைய தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் வேர்களைத் தேடி திட்டத்தின் மூலமாக, தமிழ்நாட்டைப் பார்க்க நம்முடைய பண்பாட்டை இறுகப் பற்றிக் கொள்ள நம்முடைய சொந்தங்களை அடையாளம் காண வந்த இளைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி அது. 

அதிலும் ராதிகா என்ற மியான்மர் நாட்டைச் சேர்ந்த நம் சகோதரி, பல ஆண்டுகளாக விட்டுப்போன உறவை மீண்டும் கண்டுபிடித்து நா தழுதழுக்கப் பேசியது என் நெஞ்சிலேயே இருக்கிறது. தன்னுடைய வள்ளிப் பாட்டியைக் கண்டுபிடிக்க நினைத்த அவர், இப்போது தன் மாமா வீட்டோடு சேர்ந்திருக்கிறார். 

அங்கு கலாச்சாரம் எல்லாம் இருக்கிறது. ஆனால், சொந்தக்காரர்கள் குறைவு  என சொல்லி அவர் கலங்கியது, உறவுகளைப் பிரிந்து ஏங்கும் அத்தனை அயலகத் தமிழர்களின் உணர்வின் பிரதிபலிப்பாக இருந்தது. 

ஊரைத் தாண்டிய ஊரும் உலகமும் எப்படி இருக்கும் என்று அறியாக் காலத்திலேயே, யாதும் ஊரே யாவரும் கேளிர்என எல்லோரையும் சொந்தமாகக் கருதி இலக்கியம் படைத்த புகழுக்குச் சொந்தக்காரர்கள் நாம். 

அதனால்தான் இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என நான் தொடர்ந்து சொல்கிறேன். இன்றைக்கு பல நாடுகளில் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருக்கிறோம். அந்த உயர் பொறுப்புகளுக்குக் கடைக்கோடியில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களும் வரமுடியும் என்பதை சாத்தியப்படுத்தியது, 

நம்முடைய தமிழகத்தில் இருக்கும் சமூக நீதியும் அதற்காக பாடுபட்ட தலைவர்களும்தான். தமிழ்நாட்டுத் தமிழர்களை மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாக நமது திராவிட மாடல் அரசு தமிழகத்தில் இருக்கிறது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்காக அயலகத் தமிழர் நலவாரியம் உருவாக்கி இருக்கிறோம். ஜனவரி 12-ம் நாளை அயலகத் தமிழர் நாளாகக் கொண்டாடுகிறோம். அந்த வாரியத்தின் மூலமாக, தமிழால் இணைவோம், உலகெங்கும் தமிழ், தமிழ் வெல்லும் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டிருக்கிறது.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2,398 பேரை அயல்நாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் மீட்டு வந்தோம். மொத்தத்தில், தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும்,  நமக்கு என்று தாய்வீடாக தமிழ்நாடு இருக்கிறது என்ற உணர்வை, நம்பிக்கையை நம்முடைய தி.மு.க. ஆட்சி ஏற்படுத்தி வருகிறது. 

இது அனைத்துக்கும் முத்தாய்ப்பான திட்டம்தான் வேர்களைத் தேடி என்று, அயலகத்தில் வாழும் நம்முடைய குழந்தைகளை தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் திட்டம். அதனால்தான், நான் எப்போதும் சொல்வேன். இது ஒரு கட்சியின் அரசல்ல, ஒரு இனத்தின் அரசு. 

உலகத்தில் வேறு எந்த இனத்துக்கும் இல்லாத பெருமை நம் தமிழினத்துக்கு உண்டு.மொழிப்பற்றுக்கும் மொழி வெறிக்குமான வேறுபாட்டையும்-இனப்பற்றுக்கும் இனவெறிக்குமான வேறுபாட்டை அறிந்தவர்கள் 

நாம்.இங்கு கூடியிருக்கும், உங்களில் சிலர் மட்டும்தான் இந்த நாட்டுக்கு விரும்பி வந்திருப்பீர்கள். மற்றவர்கள் சூழ்நிலை காரணமாகவும், பணிகளுக்காகவும் இங்கு வந்திருப்பீர்கள்.  உங்களிடம் நான் வைக்கும் ஒரே கோரிக்கை. 

உங்களுக்குள் எந்தப் பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள். ஒரு தாய் மக்களாக வாழுங்கள். உங்கள் உயர்வுக்குக் காரணமான அறிவையும், உழைப்பையும் மட்டும் நம்பி, வாழ்க்கைப் பயணத்தைத் தொடருங்கள். உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது எல்லாம். ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்குக் குழந்தைகளோடு வாருங்கள். 

உங்களால் முடிந்த செயல்களை தமிழ்நாட்டுக்குச் செய்யுங்கள்.  நான் இங்கிருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பிய பிறகும், உங்களின் இந்த ஆரவாரமும் மகிழ்ச்சியான முகங்களும்தான் எப்போதும் என் ஞாபகத்துக்கு வரும் என தெரிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ' 

இமைநேரத்தில் கண்டங்களைக் கடந்துவிட்ட உணர்வு. சிகாகோ நகரில் வெள்ளமெனத் தமிழர் திரண்ட காட்சியில், தமிழினம் மேலெழுந்து வந்த வரலாற்றைக் கண்டேன். கற்ற கல்வியால் ஒப்பற்ற உழைப்பால் பெற்ற பெருமைகளைத் தாங்கி, அமெரிக்க மண்ணில் தமிழர் தலைநிமிர்ந்து வாழ்தல் கண்டு தமிழகத்தின் முதல்வராக தி.மு.க. தலைவராக அளவில்லா மகிழ்ச்சியடைந்தேன்.

புலம்பெயர்ந்து புலர்ந்தெழுந்த தமிழர்களின் நல்வாழ்வு நாளும் சிறக்க என் வாழ்த்துகளைச் சொல்லி அமெரிக்கப் பயணத்தின் குறிப்புகளில் பொறிக்க அவர்களது மகிழ்ச்சியை என் நெஞ்சிலேந்தினேன் என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து