முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த 48 மணி நேரத்திற்கு கன மழை

சனிக்கிழமை, 19 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.19 - தென்மேற்கு வங்கக் கடலில் குமரிக்கும் மன்னார் வளைகுடாவிற்கும் இடையே காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து அதே இடத்தில் இருப்பதால் தமிழகத்தில் மேலும் 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்டது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவும் நேற்று காலையிலும் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் சென்னையைப் போலவே நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை நல்ல மழை பெய்தது. திருவள்ளூரில் இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை கனமழையாக பெய்தது. குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் கடற்கரை கிராமங்களில் மழை பெய்தது. கன்னியாகுமரி, கோவளம், மணக்குடி, மேலமணக்குடி, பள்ளம், புத்தன்துறை போன்ற கடலோர கிராமங்களில் நல்ல மழை கொட்டியது. நேற்று அதிகாலையிலும் தக்கலை, குளித்துறை, மார்த்தாண்டம், திற்பரப்பு, குலசேகரம், திருவெட்டாறு, கருங்கல், மாத்தூர், பேச்சிப்பாறை மற்றம் பெருஞ்சாணி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. 

சிதம்பரம் பகுதியில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. 

காற்றழுத்தத் தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்