முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர அரசின் சிறப்புக்குழு விசாரணை தற்காலிகமாக நிறுத்தம் : சுப்ரீம் கோர்ட் விசாரிப்பதை அடுத்து நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2024      இந்தியா
Tirupati 2024-03-30

Source: provided

திருப்பதி : திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருவதை அடுத்து ஆந்திர மாநில அரசு நியமித்த சிறப்புக்குழுவின் விசாரணை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு போன்ற தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக முதல்வரும் தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள்களில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் போன்ற கலப்படங்கள் இருந்ததாக கூறும் ஆய்வறிக்கையை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. இந்த விவகாரம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இதனிடையே, லட்டு கலப்படம் குறித்து வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரிக்க 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து சந்திரபாபு நாயுடு கடந்த செப். 26-ம் தேதி உத்தரவிட்டார்.

குண்டூர் சரக காவல்துறை ஐ.ஜி. சர்வசிரேஷ்ட திரிபாதி தலைமையிலான இக்குழுவில் விசாகப்பட்டினம் சரக டிஐஜி கோபிநாத், ஒய்எஸ்ஆர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்வர்தன் ராஜு, திருப்பதி காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் வெங்கட ராவ், துணை கண்காணிப்பாளர்கள் சீதாராம ராவ், சிவநாராயண சுவாமி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு கடந்த செப். 28 ஆம் தேதி தொடங்கி திருப்பதி திருமலையில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நேற்று முன்தினம் (செப். 30) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'திருப்பதி லட்டில் கலப்படம் குறித்து கடந்த ஜூலை மாதம் ஆய்வு செய்து அதன் அறிக்கையை செப்டம்பர் மாதம் வெளியிட்டது ஏன்? பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள்(சந்திரபாபு நாயுடு) இந்த விவகாரத்தை நேரடியாக ஊடகங்களிடம் ஏன் எடுத்துச் சென்றீர்கள்? சிறப்பு விசாரணைக்குழுவை நியமித்துள்ள மாநில அரசு, அதன் அறிக்கை வருவதற்கு முன்னே ஊடகங்களில் இந்த ஆய்வறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?' என பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து வழக்கின் அடுத்த விசாரணை நாளை (அக். 3) ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த விசாரணை நடைபெறும் வரை, ஆந்திர மாநில அரசு நியமித்துள்ள சிறப்புக்குழு விசாரணை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மூத்த அதிகாரி துவாரகா திருமலை ராவ் கூறுகையில், 'நாங்கள் முதற்கட்ட விசாரணையை முடித்துவிட்டோம். இதுகுறித்து சிலரிடம் கருத்துகளை கேட்டு பதிவு செய்துள்ளோம். தற்போது இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருவதால் எங்கள் விசாரணையை நிறுத்திவைத்துள்ளோம்' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து