முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் கோலி

செவ்வாய்க்கிழமை, 1 ஏப்ரல் 2025      விளையாட்டு
Virat-Kohli 2023 07-22

Source: provided

இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான விராட் கோலி தற்போது ஐ.பி.எல். தொடரில் விளையாடி வருகிறார். சர்வதேச டி20 தொடரில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில், விராட் கோலி அனைத்துப் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு இங்கிலாந்து சென்று குடிபெயர விருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

விராட் கோலி ஐ.பி.எல்.லில் இதுவரை 8 சதம், 56 அரைசதம் உள்பட 8094 ரன்கள் விளாசியுள்ளார். இந்தத் தொடரிலும் கொல்கத்தாவுக்கு எதிராக முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசினார். இந்திய வீரர்கள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் வேளையில் வேறு நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாட பி.சி.சி.ஐ. தடைவிதித்திருக்கிறது. இந்த நிலையில், சிட்னி அணியில் விராட் கோலி விளையாட விருப்பதாகவும் அதற்கான 2 ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் சிட்னி அணி தெரிவித்திருக்கிறது.

__________________________________________________________________________________________

தரவரிசையில் மெத்வதேவ் சறுக்கல்

சமீபத்தில் நடைபெற்ற மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் செக் குடியரசின் ஜாகுப் மென்சிக் சாம்பியன் பட்டம் வென்றார். இந்தத் தொடரின் முதல் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெளியேறினார். இந்நிலையில், ஏ.டி.பி. தரவரிசைப் பட்டியலில்   கடந்த 2023-ம் ஆண்டுக்கு பிறகு டாப் 10 இடத்தை முதன்முறையாக இழந்துள்ளார் ரஷியாவின் டேனில் மெத்வதேவ்.

தற்போதைய தரவரிசைப் பட்டியலில் மெத்வதேவ் 11-வது இடத்தில் உள்ளார். இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடத்திலும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 2வது இடத்திலும், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 3வது இடத்திலும், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 4வது இடத்திலும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 5வது இடத்திலும் உள்ளனர். கடந்த ஆண்டில் நடைபெற்ற எந்த ஒரு டென்னிஸ் தொடரிலும் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

__________________________________________________________________________________________

36 செல்போன்கள் திருட்டு: 7 பேர் கைது

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த வெள்ளியின்று நடந்த ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே., ஆர்.சி.பி. இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின்போது போட்டியை காண வந்த ரசிகர்களின் செல்போன்கள் திருட்டு போனது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில் செல்போன்களை திருடிய வட மாநிலத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 36 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. பிளாக்கில் டிக்கெட் வாங்கி மைதானத்திற்குள் சென்று செல்போன்களை திருடி உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து சென்னை வந்து அறை எடுத்து தங்கி, ஐ.பி.எல். போட்டியை காண வந்த ரசிகர்களிடம் கைவரிசை நடத்தி உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. திருடிய செல்போன்களுடன் வேலூர் சென்று அங்கிருந்து பஸ் மூலம் ஜார்க்கண்ட் செல்ல இருந்தவர்களை, திருவல்லிக்கேணி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் வேலூர் பஸ் நிலையத்தில் சுற்றி வளைத்து பிடித்தனர்.

__________________________________________________________________________________________

முக்கிய பட்டியலில் மனிஷ் பாண்டே

ஐ.பி.எல். தொடரின்  மும்பை - கொல்கத்தா  ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தாலும் அந்த அணியில் இடம் பிடித்து 19 ரன்கள் எடுத்த மனிஷ் பாண்டே ஐ.பி.எல். வரலாற்றில் மகத்தான சாதனையை படைத்துள்ளார்.

அதன்படி 2008-ம் ஆண்டில் உதயமான ஐ.பி.எல்.-ல் இதுவரை நடந்துள்ள அனைத்து தொடர்களிலும் ஆடிய டோனி, ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருடன் சாதனை பட்டியலில் மனிஷ் பாண்டேவும் இணைந்துள்ளார். அவர் 2008-ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

__________________________________________________________________________________________

சென்னையில் கிளப் கூடைப்பந்து 

சென்னையில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை முதலாவது சபா கிளப் ஆடவர் கூடைப்பந்துப் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு உள்ளரங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. போட்டியில் உள்ளூர் அணி மட்டுமல்லாமல் வெளிநாடுகளைச் சேர்ந்த கிளப் அணிகளும் பங்கேற்கவுள்ளன. போட்டியில் தமிழ்நாடு அணி, கொழும்பு கூடைப்பந்து கிளப் (இலங்கை), டைம்ஸ் கூடைப்பந்து கிளப் (நேபாளம்). திம்பு மேஜிக்ஸ் (பூடான்), டிரெக்ஸ் கூடைப்பந்து கிளப் (மாலத்தீவுகள்) ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன.

இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் ஆதரவுடன் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த முதலாவது சபா கிளப் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணியானது, வரும் மே மாதம் நடைபெறவுள்ள எப்ஜபிஏ டபிள்யூஏஎஸ்எல் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

__________________________________________________________________________________________

 மும்பை அணிக்கு நியூசி. வீரர் பாராட்டு

ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற  போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய அஸ்வனி குமார் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.   பேட்டிங்கில் அதிரடியாக விளையாடிய ரியான் ரிக்கல்டான் அரைசதம் விளாசி அசத்தினார்.   ஆட்டம் முழுவதையும் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளார்.

 இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் கேன் வில்லியம்சன் பேசியதாவது: மும்பை இந்தியன்ஸ் அணி ஆட்டம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டார்கள். டாஸ் வென்றது, பந்துவீச்சைத் தேர்வு செய்தது, கூடுதல் வேகப் பந்துவீச்சாளராக அஸ்வனி குமாரை அணிக்குள் கொண்டு வந்தது என அவர்களது திட்டங்கள் அனைத்தையும் அழகாக செயல்படுத்தினார்கள். மும்பை இந்தியன்ஸ் அணி சீரான இடைவெளிகளில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தியது சிறப்பான விஷயம் என நினைக்கிறேன். எதிரணியை பார்ட்னர்ஷிப் அமைக்க அவர்கள் விடவில்லை. ஆட்டம் முழுவதையும் மும்பை இந்தியன்ஸ் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்றார்.

__________________________________________________________________________________________

பட்டோடி கோப்பைக்கு ஓய்வு 

2007-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் வாகை சூடும் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி பெயரில் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டு வந்தது. இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இருந்து புதிய கோப்பை அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோப்பையை ஓய்வு பெறுவதற்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் இரு நாடுகளிலிருந்தும் சமீபத்திய ஜாம்பவான்களின் பெயர்களைக் கொண்ட மற்றொரு கோப்பை உருவானால் அது ஆச்சரியமாக இருக்காது.

__________________________________________________________________________________________

டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் சாதனை

ஐ.பி.எல். தொடரில் மும்பையில்  நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை  அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மும்பையின் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் 9 பந்தில் 27 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். 

இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை பட்டியல் ஒன்றில் இணைந்துள்ளார். அதாவது டி20 கிரிக்கெட் வரலாற்றில் 8000 ரன்களை கடந்த இந்தியர்கள் பட்டியலில் 5வது வீரராக சூர்யகுமார் (8,007 ரன்) இணைந்துள்ளார். இந்தப்பட்டியலில் விராட் கோலி (12,976 ரன்), ரோகித் சர்மா (11,851 ரன்), ஷிகர் தவான் (9,797 ரன்), சுரேஷ் ரெய்னா (8,654 ரன்) ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 days ago
View all comments

வாசகர் கருத்து