முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் பெரியபுரட்சி வெடிக்கும் என்கிறார் பாபாராம்தேவ்

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2012      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, ஆக.- 13 - தனது கோரிக்கைகளை பிரதமர் மன்மோகன் சிங் நிறைவேற்றாவிட்டால் பெரும் புரட்சி வெடிக்கும் என்று  யோகா குரு பாபா ராம்தேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள ரூ. 20,000 லட்சம் கோடி கறுப்பு பணத்தை மீட்க மத்திய  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பாபா ராம்தேவ் கடந்த 3 நாட்களாக டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். 3 நாட்களில் முடிப்பதாக இருந்த போராட்டத்தை  நேற்று நான்காவது நாளாக ராம்தேவ் நீட்டித்தார். இந்த  நிலையில் ராம்தேவ் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
தனது  கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடி நடவடிக்ககைளை மேற்கொள்ள வேண்டும் என்று ராம்தேவ் கேட்டுக்கொண்டுள்ளார். கறுப்பு பண விஷயத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தனது அரசியல் கண்ணியத்தை காட்ட வேண்டும் என்றும் தனது கோரிக்கைகள்  ஏற்கப்படாவிட்டால் நாட்டில் பெரும் புரட்சி வெடிக்கும் என்றும் அவர் அந்த கடிதத்தில் எச்சரித்துள்ளார். வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணம் இந்தியாவின் சொத்து என்றும் அதை  மீட்டே ஆக வேண்டும் என்றும் ராம்தேவ் கேட்டுக்கொண்டுள்ளார். பாராளுமன்ற தேர்தலின் போது  தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கறுப்பு பணத்தை மீட்போம் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி உறுதி அளித்திருந்தது. அந்த உறுதி மொழியை  பிரதமர் மன்மோகன் சிங்தான் அளித்தார். ஆனால் 100 நாட்களுக்கு  மேல் ஆகியும் கூட அந்த கறுப்பு பணம்   மீட்கப்படவில்லை என்றும் ராம்தேவ் சுட்டிக்காட்டினார். நீங்கள் கண்ணியமானவர்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதே சமயம்  அரசியல் ரீதியாகவும் நீங்கள் கண்ணியமானவர் என்றால் எங்களது கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராம்தேவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
யாரையும களங்கப்படுத்துவதற்காக நாங்கள் இந்த போராட்டத்தை நடத்தவில்லை. கறுப்பு பணத்தை மீட்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத் தான் நாங்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறோம் என்றும் ராம்தேவ் கூறியுள்ளார்.
மூன்று நாட்கள் என்று கெடு விதித்திருந்தோம். அது முடிந்து விட்டது.  இப்போது எங்களது நேரம் துவங்கி விட்டது. அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் முடிவு செய்வோம் என்றும் அவர்  கூறியுள்ளார்.
எனது கோரிக்கைகள் ஏற்புடையவை என்று கருதினால் அனைத்து அரசியல் கட்சிகளும் தனது போராட்டத்தில் இணையலாம் என்றும்  ராம்தேவ் அழைப்பு விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்