முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியின் அடுத்த முதல்வா் அதிஷி ?

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2024      இந்தியா
Adishi 2024-02-04

புதுடெல்லி, அடுத்த 2 நாள்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருக்கும் நிலையில், அடுத்த முதல்வர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இதில் அமைச்சர் அதிஷிக்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிணையில் விடுதலையாகி வெளியே வந்திருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தார்.

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, சிறையிலிருந்து வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவால், கட்சியின் மூத்த தலைவர்களுடன் தில்லியின் அரசியல் சூழல் மற்றும் ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டிருந்தார். 

இந்நிலையில், தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் புதிய தலைமையகத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது மனைவி சுனிதா கெஜ்ரிவால் மற்றும் கட்சியின் பிற மூத்த தலைவர்களுடன் இணைந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றியபோதுதான், யாரும் எதிர்பாராத வகையில், ராஜினாமா முடிவை அறிவித்திருந்தார்.

இதனால், அரவிந்த் கெஜ்ரிவாலைத் தொடர்ந்து தில்லியின் அடுத்த முதல்வராக அமரப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேவேளையில் மணீஷ் சிசோடியாவும் தானும் பதவியில் அமர மாட்டோம் என்று கெஜ்ரிவால் கூறிவிட்டதால், அடுத்த முதல்வர் என்ற இடத்தில் மணீஷ் சிசோடியா இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

தற்போதைய சூழ்நிலையில், தில்லி அமைச்சரும், கல்வி நிலைக்குழு தலைவருமான அதிஷி, முதல்வர் போட்டியில் முன்னிலையில் உள்ளார். தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோது, தில்லி நிர்வாகத்தை சிறப்பாகக் கையாண்டு வந்ததால், இவர் முதல் வரிசையில் உள்ளார்.

இவருக்கு அடுத்த இடத்தில் அமைச்சர் கோபால் ராய் உள்ளார். 49 வயதாகும் கோபால் ராய், ஆம் ஆத்மியில் பல ஆண்டு கால அனுபவம் கொண்டிருப்பவர், மாணவர் அமைப்பில் பணியாற்றி, அமைச்சராகி, தொழிலாளர் சமுதாயத்தினருடன் நெருங்கிய தொடர்பிருப்பதால் இவரது பெயரும் பேசப்பட்டு வருகிறது.

தில்லி அரசியல் வட்டாரத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லாட் மிக முக்கிய நபராக விளங்குகிறார். இவரது தலைமையின்கீழ், தில்லி அரசு, சாலைப்போக்குவரத்தில் பல முக்கிய மைல்கல்களை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் வருவாய் துறை அதிகாரியான சுனிதா கெஜ்ரிவால், அவரது கணவரைப் போலவே, வருமான வரித்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர். தில்லி முதல்வர் கெஜ்ரிவால் சிறையில் இருந்த போது ஆம் ஆத்மிக்காக மக்களவைத் தேர்தலில் தில்லி, ஹரியாணா, குஜராத் மாநிலங்களில் சிறப்பாக பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.

அவ்வப்போது, கெஜ்ரிவால் எழுதிய கடிதங்களை செய்தியாளர்களிடம் வெளியிட்டும், அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்தும், கெஜ்ரிவாலின் குரலாக இருந்து வந்துள்ளார். இன்டியா கூட்டணி சார்பில் நடைபெற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும், ஆம் ஆத்மி சார்பில், இவர்தான் பங்கேற்றிருந்தார். இவருக்கும் நிர்வாகத்தில் திறமை இருப்பதால், தில்லி நிர்வாகத்தை கையாள்வதிலும் எளிதாக இருக்கும் என்பதால் இவரும் முதல்வர் பதவியில் அமரவைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து