முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி வெற்றி பெறுவது இந்தியாவுக்கு மட்டுமல்ல... பா.ஜ.க.வுக்கே நல்லதல்ல : முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : என்னைப் பொறுத்தவரையில் மோடி வெற்றி பெறுவது இந்தியாவுக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கே நல்லதல்ல" என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், “மக்களவைத் தேர்தல் களத்தில் திமுக முதன்மையான இடத்தில் இருக்கிறது. அதிமுக வெகுதூரம் தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடிக்கப் போராடுகிறது. மற்ற கட்சிகள் கனவு உலகத்தில் மிதந்து கொண்டிருக்கலாம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆங்கில இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் தெரிவித்ததாவது., கடந்த சில நாட்களாக மக்களவைத் தேர்தலுக்காக களத்தில் பிரசாரம் செய்து வருகிறீர்கள். மக்கள் என்ன நினைக்கிறார்கள்? உங்களின் கணிப்பு என்ன?

17 தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரையை இதுவரை முடித்துவிட்டேன். திமுக கூட்டணியே வெல்லும், சாதாரணமான வெற்றியாக அல்ல, மகத்தான வெற்றியாக அமையும் என்பது மக்களின் முகங்களில் தெரிகிறது. கடந்த மூன்றாண்டு காலமாக திராவிட மாடல் ஆட்சியானது மக்களுக்குச் செய்து கொடுத்த மகத்தான சாதனைகள் அனைத்தையும் மக்கள் அறிந்திருக்கிறார்கள். எந்தத் திட்டத்தின் பெயரைச் சொன்னாலும் மக்கள் கைதட்டுகிறார்கள். எனவே, 2021 சட்டமன்றத் தேர்தலின்போது எங்களுக்கு இருந்த ஆதரவைவிட இப்போது ஆதரவு இன்னும் அதிகமாகி இருக்கிறது.

அதேபோல், மோடி மீதான கோபமும் அதிகமாகி இருக்கிறது. மோடி என்பது போலியாகக் கட்டமைக்கப்பட்ட பிம்பம் ஆகும். அந்தப் பிம்பம் உடைந்து வருகிறது. கடந்த இரண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் தமிழகத்தில் மோடி வெற்றி பெறவில்லை. அதைப் போலவே இந்தத் தேர்தலில் அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற உறுதி மக்களிடம் இருப்பதைப் பார்க்கிறேன்.

தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழகத்துக்கும் தொடர்ந்து துரோகம் இழைப்பதையே தொழிலாகச் செய்து வரும் பாஜகவை வீழ்த்தும் உறுதி மக்களிடம் இருக்கிறது. அந்த பாஜகவின் பாதம்தாங்கியாக இருந்து துரோகம் இழைத்தவர் பழனிசாமி. இன்றைய தினம் பாஜக போட்டுத்தந்த திட்டத்தின்படியே தனி அணியை உருவாக்கி சதிநாடகம் போட்டு வருகிறார் பழனிசாமி. இதையும் மக்கள் உணர்ந்துவிட்டார்கள். இந்த இரண்டு அணியையும் மக்கள் ஒருசேர வீழ்த்தத் தயாராகி விட்டார்கள்.”

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, இந்தத் தேர்தல் நெருக்கத்தில் கைது செய்ததன் நோக்கம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

“மோடியின் தோல்வி பயம்தான் அவரைத் தவறுக்கு மேல் தவறு செய்ய வைக்கிறது. 370 இடம் பிடிப்போம், 400 இடம் பிடிப்போம் என்பவர் எதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களை, அதிலும் குறிப்பாக மாநில முதலமைச்சர்களைத் தேர்தல் நேரத்தில் கைது செய்ய வேண்டும்? இந்தியா கூட்டணிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வரமாட்டார் என்று பாஜக நினைத்தது. கடைசி வரைக்கும் இருக்க மாட்டார் என்று நினைத்தார்கள்.

கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை சுமுகமாக முடித்து விட்டார் கெஜ்ரிவால். வடக்கில் உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி அணியானது வலுவாக அமைந்துவிட்டது. இங்கெல்லாம் போய் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்தால் பாஜக ஒரு சில தொகுதிகளைக் கூட கைப்பற்ற முடியாது என்பதே கள நிலவரம். அவரை பிரசாரம் செய்ய விடாமல் தடுக்கவும், அவரது இமேஜை உடைக்கவும் இதனைச் செய்துள்ளார்கள்.

உண்மையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் செல்வாக்கு, அவரது கைதுக்குப் பிறகு மிக மிக அதிகமாகி விட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது, பாஜக ஆதரவாளர்களையே மனமாற்றம் செய்துள்ளது. 'இது அடக்குமுறை ஆகும்' என்று அவர்களே சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். நடுநிலை வாக்காளர்களையும் இது யோசிக்க வைத்துள்ளது. அவரைக் கைது செய்தது தவறு என்று பாஜக மேலிடத் தலைவர்களே தங்களுக்குள் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்.

இந்தக் கைதுக்கு பிறகு வடமாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு வெகுவாக சரிந்துவிட்டது. சிறையில் இருந்தபடி ஆட்சி நடத்தும் அவரின் நெஞ்சுரத்தை நான் பாராட்டுகிறேன். ஆம் ஆத்மி கட்சிக்கு திமுக என்றும் துணை நிற்கும்.”

இந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சி குறித்த உங்கள் கருத்து என்ன?

“குஜராத் மாநிலத்தை வளப்படுத்தி விட்டதாகப் பொய்யான பிம்பத்தைக் காட்டி மோடியை 2014 தேர்தலில் வளர்ச்சியின் நாயகனாக அறிமுகம் செய்தது பாஜக. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசினார் மோடி. அந்த வாக்குறுதிகள் எதையும் அவர் நிறைவேற்றவில்லை. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்டு ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் தரப்போவதாக வட மாநிலங்களில் பிரசாரம் செய்தார்கள். அதுதான் அவர்களை வெற்றி பெற வைத்தது.

ஆட்சிக்கு வந்ததும் அனைவரும் வங்கிக் கணக்கை தொடங்குங்கள் என்று சொல்லி ஏமாற்றினார்கள். அதை அந்த மக்கள் நம்பினார்கள். 'இது ஜூம்லா' என்று இப்போது கூச்சமே இல்லாமல் சொல்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. வளர்ச்சியின் நாயகனாகத் தன்னைக் கட்டமைத்துக் கொண்ட மோடி, இந்தப் பத்தாண்டு காலத்தில் எதையும் வளர்க்கவில்லை. தன்னுடைய தனிமனித பிம்பத்தை வளர்த்திருக்கிறார். சொல்லிக் கொள்ள அவரிடம் எந்த சாதனையும் இல்லை.

மோடியால் சிதைக்கப்பட்ட பட்டியல்தான் அதிகம். மாநிலங்களைச் சிதைத்தார், இந்தியப் பொருளாதாரத்தைச் சிதைத்தார், இந்திய அமைதியைக் குலைத்தார். இப்படி சமூக அரசியல் பொருளாதாரத்தின் அனைத்துப் பக்கத்தையும் சிதைத்துவிட்டார். இனி அவர் சிதைக்க ஏதுமில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் சிதைக்க நேரம் பார்த்துக் கொண்டு இருக்கிறார். இந்தத் தேர்தலில் வென்றால் அவர் செய்வதற்கு இது ஒன்றுதான் பாக்கி இருக்கிறது. என்னைப் பொருத்தவரையில் மோடி வெற்றி பெறுவது இந்தியாவுக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கே நல்லதல்ல. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து